மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம்.. முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது!

Su.tha Arivalagan
Oct 20, 2023,09:35 PM IST
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம் இன்று மாலை முழு அரசு மரியாதைகளுடன் நடைபெற்றது. 21 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர். என். ரவி, அமைச்சர்கள் பொன்முடி,  தாம. மோ. அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

செங்கல்பட்டு மாவட்டம் மருதாந்தகம் அடுத்துள்ள மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இதை நிறுவி ஆன்மீகப் புரட்சியை படைத்தவர் பங்காரு அடிகளார். அதாவது  பெண்கள்தான் பூஜை  உள்ளிட்ட அனைத்தையும் மேற்கொள்வார்கள். மாதவிடாய்க் காலத்திலும் கூட பெண்களே இங்கு பூஜை செய்வார்கள். ஆண்களும், பெண்களும் சமம் என்பதை நிரூபித்த வழிபாட்டுத் தலம் இது. இதனால்தான் பங்காரு அடிகளாரை ஆன்மீகப் புரட்சியாளர் என்றும் அழைப்பார்கள்.



மேல்மருவத்தூரில் 1941 மார்ச் 3ஆம் தேதி கோபால் மீனாம்பாள் தம்பதியின் மூத்த மகனாக பிறந்தவர் பங்காரு அடிகளார். அதே பகுதியில் ஆசிரியராக பணியாற்றியவர்.  பின்பு ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைத்து ஆன்மீக சேவையில் ஈடுபட்டு வந்தார்.  மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பள்ளிகள் என பல நிறுவப்பட்டு, அங்கு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு  குறைந்த கட்டணத்தில் கல்வியைக் கொடுத்து சேவையாற்றி வந்தார்.

2019ஆம் ஆண்டு பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

இந்நிலையில் பங்காரு அடிகளார் நேற்று மாலை மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். இவருடைய உடல் ஆதிசக்தி பீடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இவருடைய இறப்பு செய்தி கேட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சக்தி பீட பக்தர்கள், பெண்கள், வெளி மாநில பக்தர்கள் என சாரை சாரையாக குவிந்து விடிய விடிய வந்து அஞ்சலி செலுத்தினர்.

நேற்று இரவு  பாமக நிறுவனர் ராமதாஸ், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.  பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் மு .க ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் பங்காரு அடிகளாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இவர்களுடன் அமைச்சர்களான பொன்முடி, கே. என் நேரு ,துறைமுக முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.



அதேபோல ஆளுநர் ஆர். என். ரவியும் நேரில் வருகை தந்து பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இறுதிச் சடங்கிலும் அவர் கலந்து கொண்டார்.

பங்காரு அடிகளாரின் உடல் அருள்வாக்கு சொல்லும் பகுதியில் இன்று மாலை ஐந்து மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. அதன்படி 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க உடல் அடக்கம் நடைபெற்றது. 

பங்காரு அடிகளார் இறுதிச் சடங்கையொட்டி மேல்மருவத்தூர் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.