மேகாலயா கவர்னரின் இந்தி உரை.. சட்டென கொந்தளித்த எம்எல்ஏக்கள்.. சட்டசபையில் புயல்!

sahana
Mar 23, 2023,11:12 AM IST

ஷில்லாங்: மேகாலயா சட்டசபையில் கவர்னர் இந்தியில் உரையாற்றியதற்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தங்கள் மாநில மொழிகளிலேயே உரையாற்ற வேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்த நிகழ்வு அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மாநிலங்களுக்கு கவர்னர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும், மத்திய அரசு பரிந்துரைக்கும் நபர்களே நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் சமீப காலமாக பாஜக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத மாநிலங்களில் உள்ள கவர்னர்கள் அனைவரும் ஆளும் கட்சியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். உதாரணமாக தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், டில்லி போன்ற மாநிலங்களில் ஆளும் அரசுக்கும் கவர்னர்களுக்கும் இணக்கமான போக்கு இருக்கவில்லை.


குறிப்பாக தமிழ்நாட்டில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களை கவர்னர் ஒப்புதல் அளிக்காமலேயே காலம் தாழ்த்தி வருவது அரசியல் நோக்கர்களுக்கு தெரிந்த கதைதான். இதற்கு இடையே தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு ஹிந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இதனாலும் சில நேரங்களில் மத்திய அரசை, திமுக எதிர்த்து வருகிறது. இந்த ஹிந்தி எதிர்ப்பு மனநிலை தமிழ்நாட்டை கடந்து இன்னும் சில மாநிலங்களிலும் இருந்து வருகிறது.




இது ஒருபுறம் இருக்க, அண்மையில் நடைபெற்ற மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து அதிக இடங்களைப் பெற்ற என்பிபி தலைமையில் பாஜக, சுயேட்சைகள் மற்றும் மாநில கட்சிகளை உள்ளடக்கிய புதிய கூட்டணி ஆட்சி பதவியேற்றது. மேகாலயா முதல்வராக மீண்டும் கான்ராட் சங்மா பதவியேற்றார்.


இந்த புதிய அரசு அமைந்ததும் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர், கவர்னர் பாகு சவுகான் உரையுடன் தொடங்கியது.  கவர்னர் பாகு சவுகான், ஹிந்தி மொழியில் உரையை வாசித்தார். இதற்கு எதிர்க்கட்சிகளில் ஒன்றான விபிபி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "மேகாலயா மாநிலத்தின் காசி, காரோ மொழிகளை 8வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என நாங்கள் போராடி வருகிறோம். அஸ்ஸாமிய மொழித் திணிப்புக்கு எதிராகவும் போராடுகிறோம். அஸ்ஸாம் மொழித் திணிப்பில்தான் மேகாலயா தனி மாநிலமே உருவானது. இந்த நிலையில் எங்களுக்கு புரியாத மொழியில் கவர்னர் உரையை வாசித்தால் எப்படி ஏற்க முடியும்?. மேகாலயா மாநிலம், ஹிந்தி மொழி பேசுகிற மக்களைக் கொண்ட மாநிலம் அல்ல. இம்மாநிலத்தில் தனித்துவமான மொழிகள் பேசப்படுகின்றன. ஆகையால் எங்களுக்கு புரிந்த மாநில மொழிகளில்தான் கவர்னர் உரையாற்ற வேண்டும்." என குரல் எழுப்பினர்.


இதனை சற்றும் எதிர்பார்க்காத மேகாலயா கவர்னர் ஸ்தம்பித்துப் போய் நின்றார். முதல்வர் சங்மாவும் இதை எதிர்பார்க்கவில்லை. இருவரும் சட்டென சுதாரித்துக் கொண்டு எதிர்க்கட்சி எம்எல்ஏவின் கூக்குரலை நிராகரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்க்கட்சியினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பும் செய்தனர்.