3 வயது பெண் குழந்தை மீது குற்றம் சாட்டிப் பேசிய.. மயிலாடுதுறை கலெக்டர் அதிரடி இடமாற்றம்

Su.tha Arivalagan
Feb 28, 2025,08:23 PM IST

சென்னை: பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட மூன்று வயது பெண் குழந்தை மீது குற்றம் சாட்டிப் பேசி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதியை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்துள்ளது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடி பள்ளிக்குச் சென்ற மூன்றரை வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது. இந்த அதிர்ச்சிச் சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.  இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது குறிப்பிட்ட கலெக்டர் மகாபாரதி, அந்தக் குழந்தை மீதும் தவறு இருக்கிறது என்று கூறிப் பேசியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.




மிகச் சிறந்த கலெக்டராக அறியப்பட்ட, மயிலாடுதுறை மக்களின் அன்பைப் பெற்றவரான கலெக்டர் மகாபாரதியின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. திமுக எம்.பி கனிமொழி இதுகுறித்துக் கூறுகையில்,  குழந்தைகளுக்கு எதிராக இப்படியான கருத்துகளைப் பேசும் நபர்கள் எப்படி தங்களைப் படித்தவர்கள் என்றும், மனிதர்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள். நாம் ஏன் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்? How do people like these call themselves educated or even human? And why are we expected to tolerate it? என்று காட்டமாக கேட்டிருந்தார்.


பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கலெக்டர் மகாபாரதிக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர். சமூக வலைதளங்களிலும் மகாபாரதி பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வந்தன.


இதையடுத்து தற்போது மயிலாடுதுறை கலெக்டராக இருந்த மகாபாரதியை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய கலெக்டராக எச்.எஸ்.ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்து வந்தார். இடமாற்றம் செய்யப்பட்ட மகாபாரதிக்கு புதிய பணி ஒதுக்கப்படவில்லை.