குட்டையைக் குழப்பம் மாயாவதி.. லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவிப்பு

Su.tha Arivalagan
Jul 19, 2023,03:17 PM IST
லக்னோ: நாங்கள் "இந்தியா" அணியிலும் சேர மாட்டோம், தேசிய ஜனநாயகக் கூட்டணி அணியிலும் சேர மாட்டோம். தனித்தே போட்டியிடுவோம் என்று மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் இந்தியா அணியும் சரி, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் சரி, இரண்டுமே தலித் விரோத கூட்டணிகள்தான் என்றும் மாயாவதி சாடியுள்ளார்.

உத்தரப் பிரதேச அரசியலில் இன்னும் மாயாவதிக்கு கொஞ்சம் செல்வாக்கு இருக்கிறது. தலித்களின் வாக்குகள் கணிசமாக அவருக்கு உள்ளன. இந்த வாக்கு வங்கி எதிர்க்கட்சிகளுக்குப் போய் விடாமல் கடுமையாக போராடி காத்து வருகிறது பாஜக. இதற்காக மாயாவதி மீதுள்ள வழக்குகள் பாஜகவுக்கு உதவியாக உள்ளன. 



பாஜகவின் கிடுக்குப் பிடியிலிருந்து தப்புவதற்காக, உ.பியில் யாருடனும் கூட்டணி சேராமல் தனித்தே களம் கண்டு வருகிறார் மாயாவதி.  இதனால் ஓட்டுக்கள் பிரிகின்றன. அது பாஜகவுக்கு லாபத்தையே  கொடுக்கிறது. இந்த நிலையில் மாயாவதியை, எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக முயன்று வருகின்றன. அது இதுவ ரை பலன் தரவில்லை.

இந்தியா என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ள எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டணியில் மாயாவதி இணைவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தன. ஆனால் அவர் லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டார். இதனால் உ.பியில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடும் கனவு தகர்ந்து போய் விட்டது.

மாயாவதி இதுகுறித்துக் கூறுகையில், பஞ்சாப், ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல்கள் தவிர்த்து லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும். ராஜஸ்தான், சட்டிஸ்கர், மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தல்களிலும  பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே களம் காணும்.

ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் சட்டசபைத் மற்றும் லோக்சபா தேர்தல்களில் பிராந்தியக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம். சுயநலனுடன்தான் இந்தியா என்ற கூட்டணியை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தியுள்ளன. அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே இவர்களின் நோக்கமாகும். 

பதவியை விட்டு விரட்டப்பட்டால்தான் காங்கிரஸின் கண்களுக்கு தலித்கள் தெரிவார்கள், பிற்படுத்தப்பட்ட, ஏழை மக்கள் தெரிவார்கள். காங்கிரஸும் சரி, பாஜகவும் சரி இருவருமே தலித் விரோத கட்சிகள்தான் என்றார் மாயாவதி.