ஆர்டிஐ போட்ட சிட்டிசன்.. 40,000 பக்க ஆவணங்கள்.. அரசுக்கு இழப்பு ரூ. 80,000!

Su.tha Arivalagan
Jul 29, 2023,04:48 PM IST

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் கொரோனா காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் உள்ளிட்டவை குறித்த விவரம் கேட்ட ஒருவருக்கு கிட்டத்தட்ட 40,000 பக்கங்கள் அடங்கிய மாபெரும் ஆவணத்தைக் கொடுத்து அதிர வைத்துள்ளது மத்தியப் பிரதேச  மாநில அரசு அலுவலகம் ஒன்று.


இந்தூரைச் சேர்ந்தவர் தர்மேந்திர சுக்லா. இவர் கடந்த கொரோனா காலத்தின்போது இந்தூர் அரசு மருத்துவமனையில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள், கொடுக்கப்பட்ட சிகிச்சைகளுக்கான ரசீதுகள் உள்ளிட்டவை குறித்த தகவல் கோரி ஆர்டிஐ மூலம் விண்ணப்பித்திருந்தார்.




இதுதொடரபாக தர்மேந்திரா சுக்லா கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் இந்தூர் அரசு மருத்துவமனையில் வாங்கப்பட்ட மருந்துகள், கருவிகள், பிற பொருட்கள் குறித்த விவரத்தை நான் கோரியிருந்தேன். ஆனால் எனக்கு ஒரு மாதத்திற்குள் தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து நான் முதலில் அப்பல்லேட் அதிகாரி டாக்டர் ரத் குப்தாவை அணுகினேன். அவர் உடனடியாக தகவல்களைத் தருமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர்தான் எனக்குத் தகவல்கள் கொடுக்கப்பட்டன.


கிட்டத்தட்ட 40,000 பக்க ஆவணத்தை அவர்கள் அளித்தனர். அதை கையால் கொண்டு வர முடியாது என்பதால் காரை எடுத்துக் கொண்டு போய் அதைப் பெற்றுக் கொண்டேன். வண்டி நிறைய அவை நிரம்பி விட்டன. டிரைவர் சீட் மட்டும் தான் காலியாக இருந்தது என்றார்.


ஒரு மாதத்திற்குள் தகவல் அளிக்கப்பட்டால்,ஆவணமாக அளிக்கப்படும் பக்கங்களுக்கு ரூ. 2 கட்டணம் தகவல் கேட்போர் கட்ட வேண்டும். ஆனால் தர்மேந்திராவுக்கு குறிப்பிட்ட ஒரு மாதத்திற்குள் தகவல�� அளிக்கப்படாத காரணத்தால், இந்த 40,000 பக்கங்களுக்கும் அவரிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


உரிய காலத்தில் தகவல் கொடுக்கப்படாத காரணத்தால், இந்த 40,000 பக்கங்களுக்கான தொகை 80 ஆயிரம் ரூபாயை அரசு தேவையில்லாமல் இழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.