காலையிலேயே குவிந்த போலீஸார்.. அதிரடி போதை ரெய்டு.. அலறிப் போன எஸ்.ஆர்.எம். கல்லூரி வளாகம்!

Manjula Devi
Aug 31, 2024,05:53 PM IST

செங்கல்பட்டு:  சென்னை அருகே பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் இன்று காலை நூற்றுக்கணக்கில் குவிந்த போலீஸார் கல்லூரியிலும், ஹாஸ்டல்களிலும் போதைப் பொருள் தொடர்பான சோதனையில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இந்த சோதனையின்போது 30க்கும் மேற்பட்ட மாணவர்களை தனி இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


நாடு முழுவதும் போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை, போதைப் பொருள் பயன்படுத்துதல், போன்றவை முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதனை தடுக்க அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. போதையால் குற்றங்களும் அதிகரிக்கின்றன. குறிப்பாக இன்றைய சூழலில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் போதை பொருள் நடமாட்டம் இருந்து வருவதாக  ஒரு பெரிய குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 


அதிலும் பள்ளிகளிலும்  போதைப்பொருள் பழக்கங்கள் இருப்பதாக நிறைய புகார்களும் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசியல் ரீதியாகவும் நிறைய விமர்சனங்கள் எழுந்து வந்தது. சமீபத்தில் கூட சென்னையில் கஞ்சா போதையுடன் மாணவர்கள் சிக்கிய சம்பவம் அதிர வைத்தது. பள்ளி மாணவர்களிடையே கஞ்சா மாத்திரைப் புழக்கம் அதிகரித்து வருவதாகவும் அச்சமூட்டும் செய்திகளும் வெளியாகி அதிர வைக்கின்றன.




இதனை தடுக்க தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் நடமாட்டம் தொடர்பான தடுப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வரிசையில் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பழக்கம் பெருமளவில் இருந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் இன்று 500க்கும் மேற்பட்ட போலீசார்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது இந்த சோதனையில் போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதைப் பொருள்கள், பாங்கு போதைவஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 30க்கும் மேற்பட்ட மாணவர்களை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.


தமிழ்நாட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் இந்த அளவுக்கு மிகப் பெரிய போதைப் பொருள் சோதனை இதுவரை நடைபெற்றதில்லை. இதுவே முதல் முறை என்பதால் பரபரப்பு கூடியது. இந்தக் கல்லூரியில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்பதால் அவர்கள் மூலமாக போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.


இந்த போதைப் பொருள் சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சோதனையை பலரும் வரவேற்றுள்ளனர். அனைத்து கல்வி நிலையங்களில் சர்ப்ரைஸ் செக் அடிக்கடி நடக்கணும். இப்படி நடந்தால் போதைப்பொருள்  நடமாட்டத்தை மாணவர்கள் மத்தியில் தடுக்க உதவியாக இருக்கும் என  பெற்றோர்களும் இந்த சோதனைக்கு  வரவேற்பு அளித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இன்றைய காலகட்டத்தில் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களும் போதைப் பொருள்களுக்கு அடிமையாவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. போதைப் பொருள் பழக்கம் தடுப்பு  என்பது ஒரு பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில் மாணவர்களை இப்ப பழக்கத்திலிருந்து விடுவிக்க போதிய விழிப்புணர்வு வழங்க வேண்டும்.


மேலும் போதைப் பொருளால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். இது தவிர பெற்றோர்களும் மாணவர்களின் செயல்களை கவனித்து அவர்களை நேர்வழிப்படுத்துவதும் போதைப் பழக்கத்திலிருந்து விடுவிக்க ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்