"அந்த 2 கண்.. அதுக்காகத்தான் சார்".. பகத் பாசிலுக்கு.. மாரி செல்வராஜ் சூப்பர் வாழ்த்து!

Su.tha Arivalagan
Aug 08, 2023,12:12 PM IST

சென்னை: பகத் பாசிலுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் சூப்பராக பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.


மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் தற்போது தென்னிந்தியத் திரையுலகின் ஐகானிக் நடிகராக மாறி வருகிறார். தெலுங்கில் நடிக்கிறார். தமிழில் நல்ல நல்ல படங்களாக பிரித்து மேய ஆரம்பித்துள்ளார்.




விக்ரம் படத்தில் அவரது கேரக்டர் வெகுவாக பேசப்பட்டது. தற்போது எல்லாவற்றையும் மிஞ்சும் அளவுக்கு மாமன்னன் படத்தில் அவர் நடித்த ரத்னவேல் கேரக்டர் பேசப்படுகிறது. அவரை வில்லனாகத்தான் படத்தில் காட்டியிருந்தார் மாரி செல்வராஜ். ஆனால் அவரை ஹீரோவாக்கி பலரும் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.


சாதீய நோக்கில் பலர் அவரைக் கொண்டாடினாலும் கூட அவரது நடிப்புக்காக பலர் பகத் பாசிலின் ரத்னவேல் கேரக்டரை கொண்டாடுகிறார்கள் என்றுதான் கருதத் தோன்றுகிறது. இந்த நிலையில் இன்று பகத்தின் பிறந்த நாளாகும். இதையொட்டி மாரி செல்வராஜ் சூப்பராக ஒரு வாழ்த்து கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:


வணக்கம் பகத் சார்!!!


உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக் கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். 


மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.




மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர் அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்.. 


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார் என்று வாழ்த்தியுள்ளார் மாரி செல்வராஜ்.


பகத் பாசிலுக்கு ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவித்துக் கொண்டுள்ளனர். ரத்னவேல் கேரக்டரை ரசிகர்கள் இந்த அளவுக்குக் கொண்டாடுவார்கள் என்று படத்தை இயக்கிய மாரி செல்வராஜும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.. நடித்த பகத் பாசிலும் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்.