மார்கழி திருவெம்பாவை பாசுரம் 20 - போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

Aadmika
Jan 05, 2024,09:52 AM IST

திருவெம்பாவை பாசுரம் 20 :


போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றிஎல் லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றிஎல் லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்

போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றியாம் மார்கழிநீ ராடேலா ரெம்பாவாய்.




பொருள் :


அனைத்திற்கும் ஆரம்பமாக விளங்கக் கூடிய பரம்பொருளை உன்னுடைய பாத மலர்களை வணங்குகிறோம். ஆதியும், அந்தமுமாய் விளங்கும் சிவ பெருமானே உன்னை வணங்குகிறோம். அனைத்து உயிர்களை படைத்து, அனைத்து உயிர்களுக்கும் காரணமாக விளங்கக் கூடியவனே உன்னை வணங்குகிறோம். அனைத்து உயிர்களும் இறுதியாக சென்று சேரும் இடமாகவும் விளங்குபவன் உன்னுடைய பொன்னான பாதங்களை வணங்குகிறோம். அனைத்து உயிர்களும் விரும்பும் மறுபிறவி இல்லாத முக்தி நிலையையும் தரக் கூடிய உன்னுடைய இரு பாதங்களையும் வணங்குகிறோம். திருமாலும், நான்முகனாகிய பிரம்மனும் கூட காண முடியாத திருவடியை தரிசிக்கும் பாக்கியத்தை எங்களுக்கு தந்த கருணையின் வடிவமான உங்களை வணங்குகிறேன். மறுபிறவி இல்லாத முக்தி நிலையை எங்களுக்கு தந்து உன்னுடைய திருவடிகளில் இணைத்துக் கொள்ள வேண்டும். வாழும் காலம் முழுவதும் உன்னுடைய நினைவிலேயே, நீராடி, போற்றி பாடி, துதிக்கும் வரத்தை எங்களுக்கு தர வேண்டும்.


விளக்கம் :


சிவபெருமானே கதி என அவருடைய திருவடிகளை முழுவதுமாக சரணடைய வேண்டும் என சொன்ன மாணிக்கவாசகர், இறுதியாக இந்த பாடலில் மூலம் தனக்கு முக்தி நிலையையும் தர வேண்டும் என சிவ பெருமானிடம் கேட்கிறார். திருவெம்பாவையின் கடைசி பாடலில் சிவபெருமானை போற்றிப் பாடி தன்னுடைய பாடலை நிறைவு செய்கிறார்.தோழியர்கள் சிலர் பேசிக் கொள்வதை போலவும், அவர்கள் பாவை நோன்பு பற்றியும், சிவ பெருமானின் பெருமைகளையும் பேசிக் கொள்வது போல் துவங்கி, இறைவன் மீது எவ்வாற பக்தி செய்ய வேண்டும், எவ்வாறு உலக மாயைகளில் இருந்து விடுபட வேண்டும், இறைவனிடம் எப்படி சரணாகதி அடைவதை சொல்லி, முக்தியையும் வேண்டி உள்ளார் மாணிக்கவாசகர். அடுத்து வரும் 10 பாடல்களும், சிவ பெருமானை அவரது பெருமைகளை பாடி துயில் எழுப்பும் திருப்பள்ளியெச்சி பாடல்களாக மாணிக்கவாசகர் அமைத்துள்ளார்.