மார்கழி திருவெம்பாவை பாசுரம் 19 - உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்(று)

Aadmika
Jan 04, 2024,07:57 AM IST

திருவெம்பாவை பாசுரம் 19 : 


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்(று)

அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள்

எம்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க

எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க

கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்

எங்கெழிலென் ஞாயி றெமக்ககேலோ ரெம்பாவாய்




பொருள் :


என்னுடைய மகள் உனக்கே சொந்தமே. அவளுக்கு அனைத்தும் நீயே என பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது பெண்ணின் தந்தை சொல்லும் ஒரு பழமையால் சொல் நாட்டில் வழக்கத்தில் உள்ளது. அதே போல் எங்களின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற அச்சத்தின் காரணமாக எங்களின் தலைவனாகிய உன் மீது கொண்ட உரிமையால் உன்னிடம் ஒன்றை சொல்கிறோம் கேள். எங்களுக்கு மாலையிடுவோர் உன்னுடைய பக்தராக மட்டுமே இருக்க வேண்டும். உன் மீது பக்தி கொண்ட ஒருவரை அல்லாமல் வேறு ஒருவருக்கு எங்களின் கைகள் மாலையிடாது. எங்களுடைய கைகள் உன்னை தவிர வேறு யாருக்கும் தொண்டு செய்யாது. அவர்களை வணங்கி, தொட்டு வணங்காது. உன் மீது பக்தி செய்யும் ஒருவரை மட்டுமே எங்களின் கண்களில் படும்படி செய். வேறு ஒருவரையும் எங்கள் கண்கள் காணம் படி செய்யாதே. எங்களுக்கு இவற்றை மட்டும் நீ பரிசாக தர வேண்டும். இந்த பரிசை மட்டும் நீ எங்களும் தருவாய் என்றால் அதைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு தேவையில்லை. சூரியன் எந்த திசையில் உதித்தால் எங்களுக்கும் என்ன, எந்த திசையில் மறைந்தால் எங்களுக்கு என்ன? இரவு பகல் பாராது நீயே கதி என இருந்து விடுவோம்.


விளக்கம் :


இறைவன் மீது எப்படி பக்தி செய்ய வேண்டும், சிவ பெருமானின் கருணை எப்படிப்பட்டது, அவருடைய பெருமைகள் என்னென்ன என்பது பற்றி வரிசையாக ஒவ்வொரு பாடலிலும் சொல்லிக் கொண்டு வந்த மாணிக்கவாசகர், இந்த பாடலில் பூரண சரணாகதி என்பதை எடுத்துக் காட்டி உள்ளார். நீயே கதி, உன்னை தவிர வேறு எந்த இன்பங்களும், எந்த வரமும் எங்களுக்கு வேண்டாம். உன்னுடைய திருவடிகளில் சரணடையும் வரம் ஒன்றே போதும் என நம்மை முழுமையாக இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவே பக்தி என்பதை அழகாக எடுத்துக்காட்டி உள்ளார். 


பொதுவாக திருமணமான பெண்கள் தன்னுடைய கணவர், பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என தெய்வத்திடம் வேண்டுவாள். திருமணமாகாத கன்னிப் பெண்களோ தங்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல கணவர் அமைய வேண்டும் என்று தான் பாவை நோன்பு இருப்பார்கள், கடவுளிடம் வேண்டிக் கொள்வார்கள். ஆனால் இறைவன் மீது அதிகப்படியான பக்தி வைத்திருப்பவர்கள் இந்த உலக இன்பங்களை விடுத்து, இறைவன் மட்டுமே போதும் என அவரது அருளை மட்டுமே பரிசாக பெறுவார்கள் என்பதை இந்த பாடலில் விளக்கி உள்ளார்.