மார்கழி திருவெம்பாவை பாசுரம் 15 "ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்"

Aadmika
Dec 31, 2023,09:29 AM IST

திருவெம்பாவை பாசுரம் 15 :


ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்

சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர

நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்

பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள் 

பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்




பொருள் : 


அழகிய உடையும், பலவிதமான அணிகளையும் அணிந்திருக்கும் நம்முடைய தோழி, எங்களுடைய பெருமானே என சிவனை எப்போதும் வாய் ஓயாமல் அழைத்துக் கொண்டே இருப்பாள். அவருடைய பெருமைகளை சொல்லிக் கொண்டே இருப்பாள். சிவனின் பெருமைகளை சொல்லும் போது பக்தி பரவசத்தால் அவளது கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அது பக்தியின் மிகுதியால் வரும் கண்ணீர் என்பதை யாரும் அறியமாட்டார்கள். 


விண்ணில் இருந்த எந்த தேவன் வந்தாலும் அவள் வணங்கமாட்டாள். சிவபெமானை மட்டுமே தெய்வமாக வணங்குவாள். சிவன் மட்டுமே தன்னுடைய தெய்வம் என கருதி இருந்த இடத்தில் இருந்தே தரையில் விழுந்து வணங்குவாள். இதை காண்பவர்கள் அவளுக்கு பித்து பிடித்து விட்டதோ என நினைப்பார்கள். அவளை ஆட்கொண்டது போல் நம்மையும் ஆட்கொள்வதற்காக சிவ பெருமான் காத்துக் கொண்டிருக்கிறார். அவரின் தாழ் பணிந்து பாடுவதற்காக வாருங்கள் பூக்கள் நிறைந்த குளத்தில் நீராடுவோம்.


விளக்கம் :


இறைவனின் மீது அளவுக்கு அதிகமான பக்தி வைத்திருக்கும் ஒருவரின் நிலை எப்படி இருக்கும் என்பதை மாணிக்கவாசகர் இந்த பாடலில் விளக்கி உள்ளார். உண்மையான பக்தி வைத்திருப்பவர்களுக்கு தெய்வத்தை கண்டதும் மகிழ்ச்சியில் தானாக கண்ணீர் பெருக துவங்கி விடும். ஆனால் இதை காண்பவர்களுக்கு கிண்டலும், வேடிக்கையுமாக தெரியும். நீயே கதி.. உனது அருள் ஒன்றே போதும். இனி கேட்பதற்கு ஒன்றும் இல்லை என்ற சரணாகதி நிலையே இதற்கு காரணம் என மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.