மார்கழி திருவெம்பாவை பாசுரம் 13 .. "பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்"

Aadmika
Dec 29, 2023,11:45 AM IST

திருவெம்பாவை பாசுரம் 13 :


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்

சங்கம் சிலம்பப் சிலம்பு கலந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.


பொருள் :




கரும் நீல நிலத்தில் குவளை மலர்கள் குளத்தில் பூத்திருப்பது கருமையான கூந்தலையும், அழகிய கண்களையும் உடைய பார்வதி தேவியை போல் தெரிகிறது. அருகில் காணப்படும் சிவந்த தாமரை மலர்கள் சிவ பெருமானின் சிவந்த மேனியை போல் உள்ளன. இந்த குளத்தில் தங்களில் அழுக்குகளை கழுவுவதற்காக மக்கள் வருகிறார்கள்.


அந்த மக்கள் நமச்சிவாய என சொல்லி நீராடுவதால் இது சிவனும், சக்தியும் இணைந்த இடமாக உள்ளது. இதில் கை வளையல்கள் சத்தமிட, நம்முடைய ஆபரணங்கள் ஓசை எழுப்ப, நாமும் நீந்தி, குளித்து நீராடி, அந்த இறைவனின் புகழினை பாடி நீராடுவோம் வாருங்கள்.


விளக்கம் :


பார்க்கும் இடங்கள், அவற்றில் இருக்கும் பொருள்கள் அனைத்திலும் இறைவன் காட்சி தருகிறான். அனைத்து இடங்களிலும் தெய்வீக தன்மை நிறைந்திருக்கிறது. இதை உணர்ந்து பக்தி செய்ய துவங்க வேண்டும். அப்படி இறைவனோடு உணர்வில் கலந்து விட்டால் பேரின்பம் நமக்கு கிடைக்கும். இறைவனுடன் ஒன்றி இருக்கும் இன்பத்தை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என அழைக்கிறார் மாணிக்கவாசகர்.