மார்கழி திருவெம்பாவை பாசுரம் 10 .. "பாதாளம் ஏழினுங்கிழ் சொற்கழிவு பாதமலர்"

Aadmika
Dec 26, 2023,08:16 AM IST

திருவெம்பாவையின் முதல் பத்து பாடல்கள் சிவனின் புகழைப் பாடி நீராட செல்வதாகவும், அடுத்து வரும் 10 பாடல்கள் சிவனின் பெருமைகளை கூறுவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகர், திருவண்ணாமலையை தரிசிக்க சென்று போது பாடப்பட்டதே திருவெம்பாவை பாடல்களாகும். சிவனுக்கு தொண்டு செய்வதை மட்டுமே வரமாக சிவனிடம் கேட்டும் விதமாக அமைக்கப்பட்டது தான் திருவெம்பாவையின் 20 பாடல்களும்.




திருவெம்பாவை பாசுரம் 10 :


பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் 

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்

ஓதஉலவா ஒருதோழன் தொண்டருளன்

கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்

ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்

ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.


பொருள் :


நாம் அடைய நினைக்கும் சிவ பெருமானின் திருவடிகள் ஏழு பாதாள உலகங்களுக்கும் கீழ் உள்ளது. பல விதமான மலர்களை நாம் சூடி பூஜை செய்யும் சிவ பெருமானின் தலைமுடி முடிவேயில்லாத வானத்திற்கும் அப்பால் உள்ளது. பார்வதி தேவிக்கு தனது உடலில் ஒரு பாகத்தை அளித்ததால் அவன் ஒருவன் அல்ல. வேதங்களும், விண்ணவர்களும், மண்ணுலகில் உள்ள அடியாளர்களும் ஒன்று சேர்ந்து துதித்து, பாடினாலும் அவனுடைய புகழை பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும், ஞானிகளுக்கும் அவன் நண்பனாக விளங்கக் கூடியவன். அளவில்லாத பக்தர்களை தனது அடியார்களாக பெற்றவன் அவன். எது அவனுடைய ஊர்? அவனுடைய பெயர் என்ன? அவனது உறவினர் யார்? என எவரும் அறிய மாட்டார்கள் . எந்த பொருளால், அவனை என்ன சொல்லி பாடுவது என்று கூட தெரியவில்லையே.


விளக்கம் :


சிவ பெருமானை வணங்க வேண்டும் என உலக மக்களை அழைத்த மாணிக்கவாசகர், இந்த பாடலில் சிவனின் பெருமைகளை பாடி உள்ளார். யாரும் நெருங்க முடியாதவனாக இருந்தாலும், உண்மையான பக்தி கொண்ட பக்தனுக்கு எளிமையான நண்பனைப் போல் உடன் இருக்கக் கூடியவன். அவனுடைய பெருமைகளை கூட யாரும் பாடி முடித்து விட முடியாது. அவனது பெருமைகளை வெறும் வார்த்தைகளில் அடக்கி விட முடியாது. அவன் எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் என்பதை இந்த பாடலில் விளக்கி உள்ளார்.