மார்கழி முதல் நாள்- திருவெம்பாவை பாசுரம் 01 - ஆதியும் அந்தமும் இல்லா!

Aadmika
Dec 17, 2023,09:57 AM IST

திருவெம்பாவை பாசுரம் 01:


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய்

விதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே

ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய்.




பொருள் : 


ஆரம்பமும் முடிவும் இல்லாத மிகப் பெரிய ஒளியின் வடிவமாக விளங்கக் கூடிய இறைவனை நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். கூர்மையான வாள் போன்ற கண்களை உடைய பெண்ணே, இந்த பாடலை கேட்ட பிறகும் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே. உன்னுடைய காதுகள் என இரும்பால் செய்யப்பட்டதா? நாங்கள் பாடுவது உன்னுடைய காதுகளில் விழவில்லையா? என முதல் தோழி, வீட்டிற்குள் இருக்கும் பெண்ணை பார்த்து பாடுனதாக மாணிக்கவாசகர் பாடி உள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மற்றொரு தோழி, நீ பாடுவது காதில் விழாமல் இல்லை இறைவனின் திருநாமத்தால் உணர்ச்சிவசப்பட்டு, அவள் விம்மி,விம்மி அழுது கொண்டிருக்கிறாள். தன்னையும் மறந்து பக்தி பெருக்காமல் அவள் அழுதை அறியாமல் தவறாக பேசுவது சரிதோனோ என்கிறாள்.


விளக்கம்  :

இறைவன் எப்படி இருப்பார், அவருடைய உருவம் எப்படி இருக்கும் என்பதை முதல் வரியிலேயே விளக்கி விட்டார் மாணிக்கவாசகர். இறைவனின் நாமத்தை சொல்லுவதால் தனக்கு கிடைத்த அந்த பேரின்பம் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் என ஒரு பெண்ணை தோழி எழுப்புவது போல் செல்லமாக எழுப்புகிறார். இது தூங்குபவர்களை எழுப்புவதற்கான பாடல் கிடையாது. அறியாமை என்ற ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கி கிடக்கும் ஆத்மாக்களை விழித்து எழச் செய்ய வேண்டும் என்பதற்காக மாணிக்கவாசகர் இவ்வாறு பாடி உள்ளார்.