மார்கழி முதல் நாள் - திருப்பாவை பாசுரம் 1... மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளாம்!

Aadmika
Dec 17, 2023,09:44 AM IST

பாடல்:


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;

நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாரா யணனே, நமக்கே பறை தருவான்,

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.




பொருள் : 


மார்கழி மாதம் மிக அருமையான, உயர்ந்த மாதம். நிலவின் ஒளி பொருந்திய இந்த நல்ல நாளில், வளம், செழுமையும் நிறைந்த ஆயர்பாடியை சேர்ந்த பெண்களே வாருங்கள் நீராட செல்லலாம். கூர்மையான ஆயுதத்துடன் போர்கலைகள் பலவும் கற்ற நந்தகோபனின் மகனும், அழகிய கண்களை உடைய பெண்ணான யசோதையின் குழந்தையும், சிங்கம் போன்ற வீரத்தையும் உடையவன் நம்முடைய கண்ணன். கார்மேகம் போன்ற கருமை நிற மேனியையும், சிவந்த கண்களையும், சூரினைப் போன்று ஒளிமிகுந்த கதிர்களை வீசும் முகத்தையும் உடையவன் நம்முடைய கண்ணன். இந்த நல்ல நாளில் அவனை வணங்கி வழிபட்டால் உலகத்தில் உள்ள அனைவரும் போற்றி புகழும் படியாக நமக்கு உயர்வான வைகுண்ட பதவியை அந்த நாராயணன் அருள்வான்.

விளக்கம் : 

மார்கழி மாதத்தில் நீராடி, கண்ணனை வணங்குவதற்காக அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை எல்லாம் எழுப்புவதற்காக ஆண்டாள் நாச்சியார் இந்த பாடலை பாடுவதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஆண்டாள் இந்த பாடலில் குறிப்பிடுவது பிறவி பெருங்கடலை. நம்முடைய உடலில் மட்டுமல்ல மனதிலும் எத்தனையோ விதமான அழுக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. அந்த அழுக்குகள் எல்லாம் பக்தியால்  நீக்கி, உயர்வான இறைவனின் திருவடியை அடைய வேண்டிய நல்ல நேரம் இது தான். வாருங்கள் என உலகத்தில் உள்ள அனைவரையும் ஆண்டாள் அழைக்கிறாள்.