"மறக்குமா நெஞ்சம்".. ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் பெரும் குழப்பம்.. "குமுறிய நெஞ்சங்கள்"!

Su.tha Arivalagan
Sep 11, 2023,10:36 AM IST
சென்னை: சென்னையில் இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. சமூக வலைதளங்களில் இதற்கு பெரும் கண்டனங்களும், குமுறல்களும் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

இப்படி ஒரு குழப்பம் இதுவரை ஏ.ஆர். ரஹ்மானுக்கு மட்டுமல்ல, எந்த ஒரு இசையமைப்பாளருக்கும் ஏற்பட்டதில்லை. அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் மிக மோசமான முறையில் ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்திருந்ததால், ஆயிரக்கணக்கில் பணத்தை செலவழித்து டிக்கெட் வாங்கி வந்தவர்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிட்டது.



சென்னை பனையூர் பகுதியில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே இது சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு மழையால் கடும் பாதிப்பை சந்தித்து ரத்து செய்யப்பட்டது. அப்போதே ரசிகர்கள் பாதிப்பைச் சந்தித்தனர். இதையடுத்து நேற்று மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெருமளவில் ரசிகர்கள் குவிந்து விட்டனர். ஆனால் நிகழ்ச்சி நடந்த இடத்திற்குப் போவதற்குள் பலருக்கும் உயிர் போய் உயிர் வந்து விட்டது. அந்த அளவுக்கு மோசமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கூடுதலாக டிக்கெட் விற்றதால் வந்த வினை இது என்று சொல்கிறார்கள். பலர் டிக்கெட் வாங்கியிருந்தும் கூட உள்ளே போகக் கூட முடியவில்லை. ஆயிரக்கணக்கில் முட்டி மோதியதைப் பார்த்தபோது அதிர்ச்சிகரமாக இருந்தது.



இந்த பெரும் குழப்பம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பும், குமுறலும் வெளியிடப்பட்டது. பலரும் ஆவேசமாக பேட்டி அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ACTC Events நிறுவனம் ஏற்பட்ட அசவுகரியங்களுக்காக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளது.