வெள்ளம் இன்னும் வடியவில்லை.. தத்தளிக்கும் தூத்துக்குடி.. மீளாத் துயரத்தில் மக்கள்!

Meenakshi
Dec 19, 2023,05:58 PM IST

தூத்துக்குடி: கனமழையினால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நீர் வடியாததினால் நாளை (டிசம்பர்-20) இரு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இரு மாவட்டங்களிலும் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாமல் உள்ளதால் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை.


வரலாறு காணாத கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் தீவிர மழை பெய்தாலும் 2 மாவட்டங்கள் மட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டன. நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களில்தான் பேய் மழை பெய்துள்ளது. 




சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு, வீடுகளில் வெள்ள நீர் புகுந்து பாதிப்பு, ரயில் நிலையத்தில் வெள்ள நீர் கடல் போல் காட்சியளித்தல், விமான சேவை ரத்து உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து இன்னும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தண்ணீரில் சிக்கி சீரழிந்து வருகிறது. வெள்ள நீர் இன்னும் வடியாததினால் மக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 


அரசும் பல்வேறு வழிகளில் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது தமிழக அரசு.  இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்துள்ளதால், நாளை புதன்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. 




தூத்துக்குடி, நெல்லை  மழை வெள்ளத்திற்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் இன்னும் வெள்ள நீரில்தான் மிதக்கின்றன. வாகைக்குளம் - ஸ்ரீவைகுண்டம் சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி பேரூர் பகுதி பார்க்க கடல் போல காட்சி தருகிறது. ஊருக்குள் தாமிரபரணி ஆற்று நீர் புகுந்துள்ளது. பல கிராமங்கள் தனித் தனி தீவுகளாக மாறிக் காட்சி தருகின்றன. 


இதே நிலையில்தான் பல ஊர்கள் உள்ளன. மீட்புப் பணிகளில் மேலும் கூடுதல் படையினரை ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.