கூட்டணிக்கு ரெடி.. ஒரு சீட் கொடுங்க.. திண்டுக்கல் சீனிவாசனிடம் டைரக்டாக கேட்ட மன்சூர் அலிகான்!

Manjula Devi
Mar 13, 2024,05:50 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


நடிகரான மன்சூர் அலிகான் சமீபத்தில்  தனது இயக்கத்தை இந்திய ஜனநாயக புலிகள் கட்சியாக மாற்றி அமைத்தார். அதாவது தேசிய அரசியலில் குதிப்பதாக அறிவித்தார். இதன் முதல் கூட்டம் கடந்த மாதம் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. மேலும் தனது கட்சியை முதன்மையான கூட்டணி கட்சிகளுடன் இணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மறைமுகமாக கோரிக்கை விடுத்தும் வந்தார்.


லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில்  அதிமுக தொடர்ந்து பல்வேறு கூட்டணி கட்சிகளுடன் தங்கள் கட்சிகளை இணைத்து வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு பக்கம் பாமக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அது தோல்வியடைந்ததை அடுத்து அதிமுக ஏமாற்றத்தில் உள்ளது. தேமுதிகவும் சரிப்பட்டு வரவில்லை இதுவரை.




இதனால் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவினர் சாதகமான முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.  இந்த நிலையில் நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வந்தார்.  அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று  பேசினர் அதிமுக தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவினர். இந்தக் குழுவில், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 


அப்போது அதிமுகவுக்கு ஆதரவு தருவதாகவும், ஒரு சீட் கொடுத்தால் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் செய்யத் தயாராக இருப்பதாகவும் மன்சூர் அலிகான் கூறினாராம். இதை புன்சிரிப்புடன் திண்டுக்கல் சீனிவாசன் கேட்டுக் கொண்டாராம். கடந்த லோக்சபா தேர்தலில் திண்டுக்கலில்தான் மன்சூர் அலிகான் போட்டியிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


வலுவான கூட்டணிக்காக காத்திருக்கும் அதிமுகவுக்கு, மன்சூர் அலிகானின் வருகை உற்சாகம் தந்திருப்பதாக கருதப்படுகிறது. கவர்ச்சிகரமான ஒரு பிரச்சார பீரங்கியாக மன்சூர் அலிகான் செயல்படவும் வாய்ப்புள்ளதால் அதிமுக தரப்பு உற்சாகமடைந்துள்ளது.