வாங்கம்மா வாங்க.. நம்ம கிட்ட வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்.. கறி வெட்டிக் கலக்கிய மன்சூர் அலிகான்!

Manjula Devi
Mar 20, 2024,04:04 PM IST

வேலூர்: வேலூர் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான், அப்பகுதியில் உள்ள கறிக்கடையில் கறிவெட்டி ஜாலியான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


லோக்சபா தேர்தல் தேதி குறிச்சாச்சு.அதற்கான வேட்பு மனு தாக்கல் செஞ்சாச்சு. அடுத்து என்ன தேர்தல் பிரச்சாரம் தானே.. அந்த ரூட்டை சரியாக ஃபாலோ பண்ணி வருகிறார் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் மன்சூர் அலிகான். அதுவும் எப்படி தெரியுமா.. வித்தியாசமான ஸ்டைலில்.


லோக்சபா தேர்தலையொட்டி,  இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார் மன்சூர் அலிகான். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் மூழ்கிவிட்டார். வழக்கம் போல அதகளமாக இருக்கிறது அவரது பிரச்சார ஸ்டைல்.




கடந்த  2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார் மன்சூர் அலிகான். அப்ப அவர் செஞ்ச அலும்பு இருக்கே.. சொல்லி மாள முடியாது. திடீர்னு  வீட்டுக்குள் நுழைவார்.. அங்குள்ள பெண்களுக்கு வணக்கம் கூறி வாக்கு கேட்டு விட்டு அப்படியே உட்கார்ந்து காய்கறி வெட்டிக் கொடுப்பார்.. 


சாலையில் ரிக்ஷாவைப் பார்த்து விட்டால் போதும்.. அவரே ரிக்ஷாவை ஓட்டுவார்..  டீக்கடைக்குள் புகுந்து மாஸ்டரை தள்ளி விட்டு விட்டு இவரே டீ போடுவார்.. மீன் கடைக்குள் புகுந்து மீன் வெட்டிக் கொடுப்பார்.. இப்படி ஜாலியான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதேபோல் இப்போது வேலூரிலும் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். காலையிலேயே  சாலையில் நடந்தும் ஜாகிங் செய்தும், உடற்பயிற்சி செய்தும் கலகலப்பாக பேசி பிரசாரம் செய்தார்.


இன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டு பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அங்கிருந்த கறிக்கடை ஒன்றைப் பார்த்த அவர் உள்ளே புகுந்து அங்கிருந்தவரிடம், தள்ளுங்க பாய் என்று கூறி கத்தியை தூக்கிப் பிடித்து சரக் சரக்கென வெட்ட ஆரம்பித்தார்.. சிக்கனை!


கறியை வெட்டிக் கொண்டே ஜாலியாக பேசி வாக்கு சேகரிப்பில் இறங்கினார். அப்போது அகிம்சைவாதியாக இருந்த என்னை இம்சைவாதியா ஆக்குறீங்களேப்பா என கலகலப்பாக எல்லாரிடமும் பேசிகொண்டே சிக்கனை இரண்டு துண்டுகளாக வெட்டிவிட்டு ஏக் மார் தோ துக்கடா (அதாவது வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு) என கூறி சிரித்தார் மன்சூர் அலிகான்!


நீங்க கலக்குங்க பாய்!