நடிகர் மனோஜ் உடல் தகனம்.. கண்ணீர் மல்க விடை கொடுத்த பாரதிராஜா குடும்பம்
சென்னை: சென்னை நீலாங்கரையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, பெசன்ட்நகர் மின்மயானத்தில் மனோஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.
நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதி தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் நடித்த வருஷமெல்லாம் வசந்தம், தாஜ்மஹால், அல்லி அர்ஜுனா, சமுத்திரம், உள்ளிட்ட படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.
அதிலும் எங்கே அந்த வெண்ணிலா, சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால், திருப்பாச்சி அருவாள ஆகிய பாடல்கள் மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளன. அதன்பின்னர் இயக்குனராகவும் வலம் வந்த மனோஜ் மார்கழி திங்கள் என்ற படத்தையும் இயக்கி உள்ளார். சினிமாவில் அப்பாவைப் போலவே மிகப்பெரிய இயக்குனராக சாதிக்க வேண்டும் என்ற இவரது கனவு நனவாகவில்லை.
48 வயதான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஓய்வில் இருந்த மனோஜ் பாரதிக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரின் இறப்பு செய்தி தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருந்தனர்.
இந்த நிலையில், மாரடைப்பால் நேற்றிரவு உயிரிழந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் திரண்டு அவரது இல்லத்திற்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தி வருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணி வரை இவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த உடல் தகனத்தின் போது நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உடன் இருந்தார். மேலும், பல திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர்.