மலையாளத்தில் முதல் முறையாக.. ரூ 200 கோடி வசூல்.. குகையை வச்சு சாதிச்சுக் காட்டிய மஞ்சுமல் பாய்ஸ்!

Manjula Devi
Mar 19, 2024,04:54 PM IST

கொச்சி: உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு ஒன்லைன் கதைக்களத்தில்  மலையாளத்தில் வெளிவந்த மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை 200 கோடி வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்துள்ளது.


இயக்குனர்  சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாள மொழியில் ரிலீஸ் ஆனது மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம். இப்படம் ரிலீஸ் ஆன தேதியிலிருந்து தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. 2005 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு ஒன்லைன் கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலா செல்லும் நண்பர்களில் ஒருவர் குணா குகையில் தவறி விழும்போது அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற பரபரப்பான பரிதவிப்பு நண்பர்களிடம் ஏற்படும். 




தவறி விழும் அந்த நண்பரை, சக நண்பர்கள் எவ்வாறு காப்பாற்றுவார் என்ற பரபரப்பான திகிலூட்டும் குணா குகையின் பின்னணியில் இப்படத்தின் கதை நகர்வுகள் இருக்கும். குறிப்பாக தமிழக மக்களுக்கு இப்படம் பிடித்ததற்கு காரணம் குணா படத்தின் ரெபர்ன்ஸ் படத்தில் ஸ்டிராங்காக இருந்ததே. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸில்  உண்டான காயமெங்கும்.. தன்னாலே மாறி போகும்.. மாயம் என்ன ..பொன்மானே பொன்மானே.. என்ற கமல் நடித்த குணா படத்தின் பாடல் வரிகள் ஒலித்தது தான்.


நல்ல திரைப்படமாக இருந்தால் மக்கள் மொழியை கடந்தும் அதனை கொண்டாடி மகிழ்வர். அந்த வரிசையில்  மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தை தமிழ் மக்கள் கொண்டாடினர். இதனால்தான் வசூலில் அந்தப் படம் சாதனை படைக்க முடிந்தது. தமிழகத்தில் 500 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட நாள் முதல் அனைத்து ஷோக்களுமே ஹவுஸ்புல். தமிழகத்தில் மட்டுமே 52 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது.


பிப்ரவரி 22ஆம் தேதி மலையாள மொழியில் வெளியானது.  இப்படம் வெளியாகி வெறும் 26 நாட்களே ஆகி உள்ளது. ஆனால் இதுவரை 200 கோடி வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்த வசூல் சாதனை கேரள பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மலையாள மொழியில் இதுவரை எந்த படமும் இவ்வளவு பெரிய வசூலை ஈட்டியதில்லை. ஆனால் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் மலையாள திரை உலகில் முதல் முறையாக 200 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது.