மணிப்பூர் அட்டூழியம்..  பெண்களை நிர்வாணப்படுத்திய கும்பலில்.. ஒருவர் கைது

Su.tha Arivalagan
Jul 20, 2023,05:17 PM IST
இம்பால்:  மணிப்பூரில் இரு பெண்களை குரூரமாக நடத்திய கும்பலைச் சேர்ந்த 32 வயது ஹெரதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிப்பூரில் கடந்த மே மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. குக்கி இனத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தி இனத்தைச் சேர்ந்த ஒரு ஆண் கும்பல் வெறித்தனமாக நிர்வாணப்படுத்தியும், பாலியல் ரீதியாக சித்திரவதை செய்தும் பொது வெளியில் நடத்திச் செல்வது போன்ற வீடியோ அது.





நாட்டையே அதிர வைத்துள்ளது இந்த குரூரம். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மிகக் கடுமையாக இதை கண்டித்துள்ளார். பிரதமர் மோடியும் முதல் முறையாக மணிப்பூர் வன்முறை தொடர்பாக பகிரங்கமாக கருத்து தெரிவித்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளியான ஹெரதாஸ் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்வர் பிரன் சிங் தெரிவித்துள்ளார். மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் கடும் தண்டனை வாங்கித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஹெரதாஸ் தெளபால் மாவட்டத்தைச் சேர்ந்தவன். அந்த வீடியோவில் பச்சை டி சர்ட்டில் இருப்பவன்தான் இந்த ஹெரதாஸ். மே 4ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. மணிப்பூர் பள்ளத்தாக்கில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி  இனத்தவருக்கும், மலைப் பகுதியில் பெரும்பான்மையினராக உள்ள குக்கி பழங்குடி இனத்தவருக்கும் இடையே அப்போது கலவரம் மூண்டது. மெய்தி மக்கள் பழங்குடியின அந்தஸ்து கோரி போராடி வருகின்றனர். இந்த கலவரத்தின்போதுதான் மெய்தி இனத்தைச் சேர்ந்த இந்த ஆண் வெறியர்கள், குக்கி பெண்களிடம் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டுள்ளனர்.

மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து முகாம்களிலும் அண்டை மாநிலங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

தேசிய மனித உரிமை ஆணையம் கண்டனம்

இதற்கிடையே மணிப்பூர் குரூரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறுகையில்,  இது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.  இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று நம்புகிறோம். 

இந்த வீடியோக்களை டிவிட்டரில் பரப்ப வேண்டாம், அதை அனுமதிக்க வேண்டாம் என்று டிவிட்டர் நிறுவனத்துக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். இதுபோன்ற சம்பவங்கள் ராஜஸ்தான், மணிப்பூரில் நடக்கின்றன. இதுதொடர்பாக பலருடனும் நான் தொடர்பில் இருந்து வருகிறேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.