மணிப்பூர் இன கலவரத்தில் கொல்லப்பட்ட.. 87 பேரின் உடல்களும்  ஒரே நேரத்தில் அடக்கம்!

Meenakshi
Dec 22, 2023,12:50 PM IST

இம்பால்: மணிப்பூரில் நடந்த இன கலவரத்தில்  கொல்லப்பட்ட குக்கி சமூகத்தைச் சேர்ந்த 87 பேரின் உடல்கள் 8 மாதங்களுக்குப் பிறகு ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


மணிப்பூரில் கடந்த எட்டு மாதங்களாக நடந்த இன கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மெய்தி சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கு பழங்குடியின மக்களான குக்கி இனத்தை சேர்ந்தவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மெய்தி சமூக மக்களுக்கும் பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே  இன கலவரம் வெடித்தது.


இந்த கலவரத்தில் இதுவரை மொத்தம் 180 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பிற இடங்களுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த வன்முறையினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். வீடுகள் சூறையாடப்பட்டன. பலர் வீடுகள் அற்ற அகதிகளாக மாறினர். பல மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்து நடந்த படியே தான் இருக்கின்றன.




ஒரு சில மாவட்டங்களில் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் மட்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரசந்த்பூர் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்ததினால் மாவட்ட ஆட்சியர் தருண்குமார் அந்த மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு 2024ம் ஆண்டு பிப்ரவரி 18 வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் வன்முறையில் உயிரிழந்த குக்கி சமூகத்தைச் சேர்ந்த 87 பேரின் உடல்கள் 8 மாதங்களுக்குப் பிறகு சூரசந்த்பூரில் அடக்கம் செய்யப்பட்டது. பிறந்த ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றும் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  வன்முறை தொடர்ந்ததால் இறந்தவர்களின் உடல்களை தராமல் அரசே வைத்திருந்த நிலையில் தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 


இதில் சமூக ஆர்வலர்கள், கிராம மக்கள் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஒரே இடத்தில் மொத்தமாக அடக்கம் செய்யப்படும் போது உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதது நெஞ்சை பதைத்தது.