மணிப்பூரில் தொடரும் கலவரம்.. சுப்ரீம் கோர்ட் விசாரணை.. கட்சிக்குள் எதிர்ப்பு.. விலகினார் பைரன் சிங்

Su.tha Arivalagan
Feb 09, 2025,09:36 PM IST

இம்பால்: மணிப்பூரில் விடாமல் கலவரம் தொடரும் சூழ் நிலையில் ஒரு வழியாக முதல்வர் பதவியிலிருந்து விலகியுள்ளார் முதல்வர் பைரன் சிங். உச்சநீதிமன்றம் அவருக்கு எதிரான முக்கியமான விசாரணையை கையில் எடுத்துள்ள நிலையில் முதல்வர் பதவியிலிருந்து விலகியுள்ளார் பைரன் சிங்.


மணிப்பூரில் கடந்த 2 வருடமாக மிக மோசமான இனக் கலவரம் தலைவிரித்தாடி வருகிறது. பலர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய அளவில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. பெண்கள் சந்தித்த துயரங்களைச் சொல்லி மாளாது. பெண்கள் குரூரமாக நடத்தப்பட்ட செயல் குறித்த வீடியோ வெளியாகி நாட்டு மக்களை அதிர வைத்தது நினைவிருக்கலாம். 


பைரன் சிங் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். அவர் விலகாவிட்டால் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. இருப்பினும் பைரன் சிங் பதவியில் நீடித்து வந்தார். இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குக்கி பழங்குடியினத்தைச்  சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் மணிப்பூர் கலவரத்தை முதல்வர் பைரன் சிங்தான் தூண்டி விட்டு வருகிறார் என்று கூறி  இதுதொடர்பாக ஆடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.




இதுகுறித்து ஆய்வு செய்த தனியார் தடயவியல் ஆய்வகம் ஒன்று, 93 சதவீதம் அளவுக்கு ஆடியோவில் உள்ள குரல் முதல்வரின் குரலுடன் ஒத்துப் போவதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து இதுகுறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டது.


மறுபக்கம் மணிப்பூர் பாஜகவிலேயே பைரன் சிங்குக்கு எதிரான குரல்கள் பகிரங்கமாக வெடிக்க ஆரம்பித்தன. முதல்வர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று பைரன் சிங்குக்கு எதிராக 12 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியதாக கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி சட்டசபையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டது. இதையடுத்து சிக்கல் வந்து விடக் கூடாது என்று நினைத்த பாஜக மேலிடம், பைரன் சிங்கை டெல்லிக்கு அழைத்தது. இதைத் தொடர்ந்து டெல்லி சென்ற முதல்வர் பைரன் சிங், கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 


அதன் பின்னர் இம்பால் திரும்பிய அவர் ஆளுநரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.  இதையடுத்து விரைவில் புதிய முதல்வரை மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்கள் தேர்வு செய்யவுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்