மாபெரும் மோசடி அமைப்பு இஸ்கான்.. மேனகா காந்தி பரபரப்பு புகார்

Su.tha Arivalagan
Sep 27, 2023,11:49 AM IST

டெல்லி: சர்வதேச கிருஷ்ணா விழிப்புணர்வுக் கழகம் (இஸ்கான்) நாட்டிலேயே மிகவும் மோசடியான நிறுவனம். பசுக்களை இறைச்சிக்காக விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்கிறது இந்த அமைப்பு என்று பாஜக எம்.பியும் மிருக வதை ஆர்வலருமான மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.


தனது கோசலைக்கு வரும் பசுக்களை இறைச்சிக்காக படுகொலை செய்ய அனுப்பி அதை வைத்து காசு சம்பாதிக்கிறது இஸ்கான் என்று அவர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.


ஆனால் மேனகா காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரம் இல்லாதவை, தவறானவை என்று இஸ்கான் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.




இதுகுறித்து இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த யுதிஷ்டிர் கோவிந்த தாஸ் வெளியிட்டுள்ள டிவீட்டில், இஸ்கான் பசுக்களைப் பாதுகாப்பதில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பசுக்கள் பாதுகாப்புக்காக அது போராடி வருகிறது. எங்களிடம் உள்ள பசுக்களும், காளைகளும் அவை இயற்கையாக மரணமடையும் வரை பராமரிக்கப்படுகின்றன. அவற்றை நாங்கள் இறைச்சிக்காக விற்பதில்லை என்று கூறியுள்ளார்.


ஆனால் இஸ்கான் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார் மேனகா காந்தி. இதுகுறித்து அவர் ஒரு வீடியோவில் கூறுகையில்,நாட்டிலேயே மிகப் பெரிய மோசடி நிறுவனம் இஸ்கான்தான். கோ சாலைகளை அது நிறுவி பசுக்களைப் பராமரிக்கிறது. இதற்காக அரசிடமிருந்து பல்வேறு சலுகைகளையும் அது பெற்று அனுபவிக்கிறது.


ஆனால் அவர்களின் மறுபக்கத்தை நான் ஆந்திராவில் காண முடிந்தது. ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் உள்ள இஸ்கான் கோசாலைக்கு நான் சென்றிருந்தேன்.  அங்கு பால் தர முடியாத எந்த பசுவையும், கன்றுக் குட்டிகளையும் நான் காண முடியவில்லை. கறவை நின்று போன எந்த பசுவையும் என்னால் காண முடியவில்லை. அப்படியென்றால் என்ன அர்த்தம் .. அவை விற்கப்பட்டு விட்டன என்று பொருள்.


கறவை நின்று போன பசுக்களை இறைச்சிக்காக விற்கிறது இஸ்கான். இவர்கள் செய்வது போல வேறு யாருமே செய்ய மாட்டார்கள். இப்படி பசுக்களை வெட்டிக் கொல்ல விற்று விட்டு, சாலைகளில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா  என்று  இவர்கள் பாடுகிறார்கள்.  இவர்களைப் போல வேறு யாரும் இறைச்சிக்காக பசுக்களை விற்பனை செய்ய மாட்டார்கள் என்று காட்டமாக கூறியிருந்தார் மேனகா காந்தி.


ஹரே கிருஷ்ணா இயக்கத்துடன் தொடர்புடைய இஸ்கான், நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கோவில்களை வைத்துள்ளது. இதற்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களும் உள்ளனர். இப்படிப்பட்ட அமைப்பை, பாஜகவைச் சேர்ந்த எம்.பியான மேனகா காந்தி கடுமையாக குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.