"எடு அந்த விளக்குமாத்த".. ஓ அப்படியா கதை.. கொஞ்ச நேரத்துல பயந்து பதறிப் போயிட்டோமே!

Su.tha Arivalagan
Mar 04, 2024,06:13 PM IST

டெல்லி: சமீபத்தில்தான் பேட்டை தலைகீழாக பிடித்து கிரிக்கெட் ஆடி காஷ்மீரை நடுங்க வைத்தார் சச்சின் டெண்டுல்கர். இப்போது இன்னொரு நபர், விளக்குமாற்றை எடுத்து அதன் கைப்பிடியால் பேட்மிண்டன் ஆடி கலங்கடித்துள்ளார்.


வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள்.. எதை வைத்து விளையாடுகிறோம் என்பது முக்கியம் அல்ல.. எப்படி விளையாடுகிறோம் என்பதே  கவனிக்கப்பட வேண்டியது என்பதையே இந்த இரு சம்பவங்களும் நிரூபித்துள்ளன.


ஜதின் சர்மா என்பவர் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு ஆணும், பெண்ணும் பேட்மிண்டன் ஆடிக் கொண்டுள்ளனர். அப்போது ஒருவர் விளக்குமாற்றுடன் (துடைப்பம்) உள்ளே நுழைகிறார். அப்படியே கோர்ட்டை பெருக்கியபடி அவர் வருகிறார். அவரைப் பார்த்த அந்தப் பெண், விளையாடுகிறோம்ல.. அந்தப் பக்கம் போங்க என்று சொல்கிறார்.




அதைப் பார்த்த  அந்த நபர் இருங்க இருங்க நாங்களும் விளையாடுவோம்ல என்று கூறி, துடைப்பத்தையே பேட் போல மாற்றி நீங்க போடுங்க பாஸ் என்று எதிர்முனையில் இருக்கும் வீரரிடம் கூறுகிறார். அந்த வீரரும் விளையாட ஆரம்பிக்கிறார். அவர் பேட்மிண்டன் ராக்கெட்டால் விளையாட, நம்மாளு துடைப்பத்தையே பேட் போல மாற்றி விளையாடுகிறார்.


இருவரும் மாறி மாறி சரமாரியாக அடித்து ஆட ஆட்டம் களை கட்டுகிறது. துடைப்பத்தின் கைப்பிடியால் பந்தை லாவகமாக அடித்து ஆடி அட்டகாசம் செய்கிறார் நம்மவர்.  அப்படியே ஒரு  புள்ளியும் எடுத்து மிரட்டி விட்டார்.


இந்த வீடியோ சூப்பர் வைரலாகியுள்ளது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வியூஸ்கள் குவிந்துள்ளன. 2 லட்சம் லைக்குகள் விழுந்துள்ளன.