செம ட்விஸ்டா இருக்கா.. செல்ப் கோல் அடித்த மமதா பானர்ஜி..  ஷாக்கில் "இந்தியா"

Aadmika
Aug 04, 2023,11:50 AM IST

கோல்கட்டா : லோக்சபாவில் ஆம் ஆத்மி அரசின் ஊழல்கள் பற்றி மத்திய அரசு அமித்ஷா பேசியது சரி தான் என திடீரென மத்திய அரசுக்கு எதிராக மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசி உள்ளது எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


லோக்சபாவில் டெல்லி சேவை மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமித்ஷா, எதிர்க்கட்சிகளின் இ-ந்-தி-யா கூட்டணியையும், ஆம்ஆத்மி கட்சியின் ஊழல்கள் பற்றியும் கடுமையாக தாக்கி பேசினார். ஆம்ஆத்மியின் ஊழலுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். 




அவர் பேசியது பற்றி கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, அமித்ஷா பேசியது சரி என தெரிவித்துள்ளார். 


எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இ-ந்-தி-யா கூட்டணியில் முக்கிய கட்சியாக இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா கூறுகையில், இந்த கூட்டணி மக்களுக்க ஆதரவான கூட்டணி. ஆம் ஆத்மியை ஆதரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது கிடையாது. அமித்ஷா பேசியது சரி தான் என்றார். அதே சமயம் பாஜக.,வை தாக்கியும் பேசினார்.


அவர் கூறுகையில், வன்முறையை ஆதரித்து பேசும் பாஜக, அடுத்த ஆண்டு தேர்தலில் அவர்களின் கூட்டணி வெற்றி பெறும் என எந்த நம்பிக்கையில் பேசுகிறது என தெரியவில்லை. எங்களின் கூட்டணி புதியது. நாங்கள் நாடு முழுவதும் இருக்கிறோம். இ-ந்-தி-யா கூட்டணி டில்லியிலும் ஆட்சி அமைக்கும். டில்லி எங்களின் பார்லிமென்ட். அவர் தெரிந்து சொன்னாரா, தெரியாமல் சொன்னாரா என தெரியாது. ஆனால் அவர் கூறியது சரி தான். 


இந்தியா எங்களின் தாய்நாடு. இந்த இ-ந்-தி-யா கூட்டணியும் எங்களுடைய தாய். அதனால் என்டிஏ.,வுக்கு எந்த மதிப்பும் கிடையாது. பாஜக காவிக்கட்சி. அது பாரம்பரியம், அரசியலமைப்பு மீது வன்முறையை உருவாக்கி வருகிறது. சில நேரங்களில் வெட்கமாக உள்ளது. தலித்தகள், மைனாரிட்டிகள் கொடுமைப்படுத்தபடுகிறார்கள். பத்திரிக்கையாளர்கள் கூட இந்துவா, முஸ்லீமா என கேட்டு தான் அனுமதிக்கப்படுகிறார்கள். வன்முறையை தவிர வேறு வழியில்லை என அவர்கள் நினைக்கிறார்கள். 


வன்முறையை உண்டாக்கி, அனைத்தையும் காவி ஆக்க முயற்சிக்கிறார்கள். இதனால் தான் நாங்கள் காவியை வெறுக்கிறோம். காவி எங்கள் தெய்வங்களின் நிறம், தியாகத்தின் நிறம். அதை இவர்கள் கொடுமைப்படுத்துவதற்காக பயன்படுத்தினால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.