மமதா பானர்ஜியின் 3வது அணி முயற்சி பலிக்குமா?.. நவீன் பட்நாயக்குடன் சந்திப்பு

Su.tha Arivalagan
Mar 24, 2023,10:31 AM IST
புவனேஸ்வர்:  காங்கிரஸ் அல்லாத 3வது அணிக்கு பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார் மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி. இதன் ஒரு பகுதியாக ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கை அவர் நேற்று சந்தித்துப் பேசினார்.

லோக்சபா தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகின்றன. வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் கட்சிகள் இறங்கியுள்ளன. பாஜக தனது திட்டத்தை மெல்ல வெல்ல அவிழ்த்து வருகிறது. மறுபக்கம் காங்கிரஸ் வலுவான கூட்டணியை அமைக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. தனது தலைமையில் அமையாவிட்டாலும் பரவாயில்லை. யார்தலைமை தாங்கினாலும் பிரச்சினை இல்லை. வலுவான எதிர்க்கட்சி கூட்டணி அமைய வேண்டும் என்று காங்கிரஸ் கூறி விட்டது.



ஆனால் மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் கே.சந்திரசேகர ராவ் ஆகியோர் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர். இவர்கள் காங்கிரஸ் இடம் பெறும் அணியில் சேர ஆர்வம் காட்டவில்லை. தனி அணி அமைக்கும் முயற்சியில் ஆர்வமாக உள்ளனர். 

சமீபத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ், கொல்கத்தாவில், மமதா பானர்ஜியை சந்தித்துப் பேசினார். அப்போது தாங்கள் லோக்சபா தேர்தலில் இணைந்து செயல்பட தீர்மானித்திருப்பதாக மமதா கூறினார். இதுதொடர்பாக ஒடிஷா முதல்வரும், பிஜூ ஜனதாதளம் தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அதன்படி நவீன் பட்நாயக்கை நேற்று மமதா பானர்ஜி புவனேஸ்வரில் சந்தித்துப் பேசினார்.  ஆனால் இந்த சந்திப்பு குறித்து பின்னர் மமதா பானர்ஜி கூறுகையில், இது மரியாதை நிமித்தமதான சந்திப்பு. நாங்கள் அரசியல் பேசவில்லை .. நாட்டின் ஜனநாயக அமைப்பை வலுவுள்ளதாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தோம். இதைத் தவிர வேறு எந்த அரசியல் குறித்தும் பேசவில்லை என்று கூறினார் மமதா பானர்ஜி.

இதற்கிடையே, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் எச்.டி. குமாரசாமி, இன்று கொல்கத்தாவில் மமதா பானர்ஜியை சந்தித்துப் பேசவுள்ளார். அதேபோல இந்த மாத இறுதியில் டெல்லி செல்லும் மமதா பானர்ஜி, அங்கு அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

இப்படி ஆளாளுக்கு கூட்டணி அமைக்க கிளம்பி வருவதால��� ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிக் கூட்டணி அமையும் வாய்ப்பு மங்கி வருகிறது. இது பாஜகவுக்கே பலனைத் தரும் என்பதால் பாஜக தரப்பு ஹேப்பியாக இதை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.