அப்பா தேவா பாட.. ஸ்ரீகாந்த் தேவா இசையில்.. "மாமா குட்டிமா" புதிய ஆல்பம்.. சூப்பரா இருக்கே!

Manjula Devi
Feb 29, 2024,05:00 PM IST

சென்னை: தேனிசைத் தென்றல் தேவாவின் குரலில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் மாமா குட்டிமா புதிய ஆல்பம் பாடலின் புரோமோவினை நடிகர் ஜெய் இன்று வெளியிட்டார்.


லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும், சமூக சேவகருமான, டாக்டர் மாலா குமார் தனது மாலா படைப்பகத்தின் சார்பில் மாமாகுட்டிமா புதிய ஆல்பத்தினை தயாரித்துள்ளனர். இந்த ஆல்பத்திற்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இவரது தந்தையான  தேவா தனது காந்தக் குரலில் பிரத்யோகமான ஸ்டைலில் பாடி அசத்தியுள்ளார்.




இலங்கை கலைஞர் பொத்துவில் அஸ்மின் இந்தப் பாடலை எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனி நடித்த நான் திரைப்படத்தில் இடம்பெற்ற தப்பெல்லாம் தப்பே இல்லை.. என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த, அஜித்குமார் நடித்த விசுவாசம் உள்ளிட்ட படங்களுக்கு எழுதிய ப்ரோமோ பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.  


முத்து முத்து கருவாயா, தாகம் தீர வாயே, இடிந்ததம்மா, சண்டாளனே ,கண்ண தொறந்ததும் சாமி, ஆகிய பாடல்கள் இவர் எழுதிய குறிப்பிடத்தக்க பாடல்கள் ஆகும். ஐயோ சாமி நீ எனக்கு வேண்டாம்.. என்ற பாடல் இலங்கையில் ரிலீஸ் ஆகி உலகம் முழுவதும் டிரெண்டானது.


ஏற்கனவே முத்து முத்து கருவாயா என்ற பாடலை ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அஸ்மின் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.இந்த நிலையில் தற்போது மீண்டும் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அஸ்வின் கூட்டணியில் மாமா குட்டிமா புதிய ஆல்பம் உருவாகி உள்ளது .இப் புதிய பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.




இது பற்றி பாடல் ஆசிரியர் பொத்துவில் அஸ்மின்  கூறுகையில், காதலர்கள் கொண்டாடப்போகும் கானாப்பாடலின் புரோமோ இந்த காதலர் தினத்தில் வெளியாவது மகிழ்வை தருகிறது. மிகச்சிறிய வயதில் இருந்தே தேவா சாரின் தீவிர ரசிகன் நான். அவர் பாடிய பாடல்களை கேசட்டில் போட்டுக்கேட்டு கொண்டாடிய காலம் ஒன்றிருந்தது. 


இப்போது அவர் எனது பாடலை பாடுகின்றார் இது நான் பெற்ற பாக்கியம். மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு தேவாவின் சாரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் பாடலாக நிச்சயம் இ்ப்பாடல் இருக்கும்.ஸ்ரீகாந்த் தேவா அவர்கள் மிகவும் ஜனரஞ்சகமாக இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்  என்று கூறினார்.