எதுக்கு இந்த வீராப்பு.. இந்தியா கொடுத்த ஹெலிகாப்டர்களை ஓட்டத் தெரியாமல் தவிக்கும் மாலத்தீவு!

Su.tha Arivalagan
May 13, 2024,05:46 PM IST

மாலே: இந்தியா கொடுத்த 3 ராணுவ ஹெலிகாப்டர்களை ஓட்டுவதற்கு பைலட் இல்லாமல் தவித்து வருகிறதாம் மாலத்தீவு. இந்த ஹெலிகாப்டர்களை இந்தியா, மாலத்தீவுக்கு தானமாக அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மாலத்தீவு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே தூதரக ரீதியில் பூசல் வெடித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்டவரான முகம்மது முயிசுதான் தற்போது அந்த நாட்டின் அதிபராகவும் தேர்வு பெற்றுள்ளார். இதனால் இப்போதைக்கு பிரச்சினை தீராது என்று கருதப்படுகிறது.


முயிசு அதிபரான பின்னர் மாலத்தீவில் நிலை கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். இந்த நிலையில் மாலத்தீவு ராணுவத்திற்குப் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மத்திய அரசின் உத்தரவின் படி அங்கிருந்து வெளியேறி விட்டனர். இப்போது மாலத்தீவு ராணுவத்திற்கு புது சிக்கல் வந்துள்ளதாம்.




அதாவது மாலத்தீவு நாட்டுக்கு 3 ராணுவ ஹெலிகாப்டர்களை அன்பளிப்பாக கொடுத்துள்ளது இந்தியா. இந்த ஹெலிகாப்டர்களை ஓட்டுவதற்குரிய பைலட்டுகள் மாலத்தீவில் இல்லை. இந்திய ராணுவ விமானிகள்தான் இதை ஓட்டி வந்தனர். இப்போது இந்திய ராணுவத்தினர் வெளியேறி விட்டதால் இந்த ஹெலிகாப்டர்களை ஓட்டத் தெரியாமல் முழிக்கிறார்களாம் மாலத்தீவு ராணுவத்தினர். இந்தத் தகவலை மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் காசன் மாமூன் உறுதிப்படுத்தியுள்ளார்.


இதுகுறித்து காசன் மாமூன் கூறுகையில், இந்த விமானங்களை ஓட்டும் குழுவில் மாலத்தீவு ராணுவத்தினர் யாரும் இடம் பெறவில்லை. இதுதொடர்பான ஒப்பந்தத்தை முந்தைய அரசு மேற்கொள்ளாததே இதற்குக் காரணம். நமது வீரர்களுக்கு விமானத்தை செலுத்தும் பயிற்சிகள் தொடர்ந்து நடந்து வந்தன. ஆனால் பயிற்சி முழுமை அடையாமல் போய் விட்டது. இதனால் இந்த விமானங்களை செலுத்த முடியாத நிலையில் நமது விமானிகள் உள்ளனர் என்றார் அவர்.


மாலத்தீவு அதிபர் முயிசு சீன ஆதரவு தலைவர் ஆவார். இதனால் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் கடும் வார்த்தைப் போர் மூண்டது. சமூக வலைதளங்களிலும் அனல் பறந்தது நினைவிருக்கலாம். இந்த நிலையில் விமானத்தை தானமாக பெற்று விட்டு அதை ஓட்ட முடியாத நிலையில் உள்ளது மாலத்தீவு. அந்த விமானங்களை இந்தியாவிடமே திருப்பித் தருமா அல்லது சீனாவிடமிருந்து விமானிகளைக் கடன் வாங்குமா என்று தெரியவில்லை.