Rajeswary Appahu: சைபர் புல்லியிங் செய்ததால்.. விபரீத முடிவை எடுத்த.. மலேசிய தமிழ் டிக்டாக் பெண்!

Su.tha Arivalagan
Jul 07, 2024,07:10 PM IST

கோலாலம்பூர்: மலேசியாவைச் சேர்ந்த பிரபல தமிழ் பெண் டிக்டாக் பிரபலத்தை பலர் சமூக வலைதளங்களில் கேலி கிண்டல் செய்ததால் அவர் வேதனை அடைந்து தற்கொலை மூலம் உயிர் நீத்துள்ளார்.


அந்தப் பெண்ணின் பெயர் ராஜேஸ்வரி அப்பாஹு. இவர் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்து வந்தவர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரீல்கள் செய்துள்ளார். வீடியோ போட்டுள்ளார். குறிப்பாக அழகு சாதனப் பொருட்கள் தொடர்பான வீடியோக்கள் ஏராளம்.




இந்த நிலையில் இவரை சிலர் கும்பலாக சைபர் புல்லியிங் செய்து வந்துள்ளனர். பல்வேறு போலியான ஐடிக்களை வைத்துக் கொண்டு அதன் மூலமாக பலரும் இவரை குறி வைத்து கிண்டல் செய்து வந்ததால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி மனம் உடைந்தார். ஒரு கட்டத்தில் இந்த சைபர் புல்லியிங் அதிகரித்து வந்ததால் வேதனை அடைந்த அவர் தற்கொலை மூலம் தனது உயிரை முடித்துக் கொண்டுள்ளார். 


இந்தப் பெண்ணுக்கு வயது 30 தான் ஆகிறது. ஏராளமான பாசிட்டிவிட்டி, மோட்டிவேஷன் பேச்சுக்களையும் இவர் தனது ரீல்ஸ்கள் மூலம் போட்டு வந்துள்ளார்.  ஆனால் இவரை குறி வைத்து நடந்த இந்த சைபர் தாக்குதல்கள்தான் அவர் இந்த விபரீத முடிவை எடுக்கக் காரணமாக அமைந்து விட்டதாக சொல்கிறார்கள்.


இதுகுறித்து மலேசிய ஐக்கிய உரிமைகள் கட்சியின் துணைத் தலைவர் டேவிட் மார்ஷல் கூறுகையில் ஒரு வாரத்திற்கு முன்புதான் தான் சந்தித்து தரும் மன உளைச்சல் குறித்து ராஜேஸ்வரி என்னிடம் வேதனையுடன் கூறியிருந்தார். பல நேரங்களில் தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாகவும் அவர் கூறியிருந்தார். சைபர்புல்லியிங்கிலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். 


தன்னைப் பற்றி மட்டுமல்லாமல் தனது குடும்பத்தையும் இந்த விஷமிகள் கிண்டல் செய்வதாகவும் கூறி அவர் வேதனை தெரிவித்தார். அவரிடம் நான் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பேசி அவரை அமைதிப்படுத்தினேன். அவருக்குப் பல அறிவுரைகளைக் கூறினேன்.  டிக்டாக்கிலிருந்து சற்று பிரேக் எடுக்குமாறும், நிலைமை சரியானதும் மீண்டும் வரலாம் என்றும் கூறியிருந்தேன். ஏதாவது ஆன்லைன் பிசினஸ் தொடங்குமாறும் அவருக்குக் கூறியிருந்தேன். மனோதிடத்துடன் இருக்குமாறும் அட்வைஸ் கூறியிரு்நதேன்.  ஆனால் இப்போது இந்த இதயத்தை நொறுக்கும் செய்தி வந்துள்ளது என்று கூறினார்.




இந்த சம்பவம் மலேசியாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சைபர் புல்லியிங் மலேசியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கும் ஒரு பிரச்சினை. குறிப்பாக பிரபலங்களுக்கு எதிராக பல்வேறு போலியான ஐடிக்களை வைத்துக் கொண்டு நடக்கும் சைபர் தாக்குதல் அளவிட முடியாத அளவுக்கு விபரீதமாக போய்க் கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களை விட்டு ஓட வைக்கும் அளவுக்கு பலர் இந்த கேவலமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


மலேசியாவில் இதேபோல டிக்டாக்கில் சிலர் சைபர் புல்லியிங் செய்ததால், 2 ஆண்டுகளுக்கு முன்பு 3 குழந்தைகளின் தாய் ஒருவர் தற்கொலை மூலம் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.  அவரது தோற்றம் குறித்தும், அவரது கைப்பைகள் குறித்தும் கிண்டலடித்து பலர் கமெண்ட் போட்டதால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்தார்.