கடன் தொல்லை.. மன உளைச்சல்.. மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை

Su.tha Arivalagan
Oct 30, 2023,06:07 PM IST

கொச்சி:  பொருளாதாரப் பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துள்ளார்.


மலையாள சின்னத்திரையுலகில் பிரபலமானவர் ரெஞ்சுஷா மேனன். ஆரம்பத்தில் டிவி ஷோக்களில் ஆங்கராக வந்தவர் பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். கொச்சியைச் சேர்ந்த ரெஞ்சுஷா மேனன், ஸ்த்ரீ என்ற தொடர் மூலம் நடிகையாக அறிமுகமானார். அது மிகப் பிரபலமாகவே தொடர்ந்து பல தொடர்களில் நடித்தார் ரெஞ்சுஷா.




இதைத் தொடர்ந்து சிட்டி ஆப் காட், பாம்பே மார்ச், கார்யஸ்தன், அத்புத தீபு உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.  மலையாள  திரை மற்றும் சின்னத்திரை ரசிகர்களின் மனங்களிலும் தனக்கென தனி இடம் பிடித்தார்.


இதுபோக பல நெடுந்தொடர்களையும் இவர் தயாரித்துள்ளார். பரதநாட்டியத்திலும் சிறந்து விளங்கியவர் ரெஞ்சுஷா. இவரது கணவர் பெயர் மனோஜ் மேனன். இருவரும் கொச்சியில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் தங்கியிருந்தனர். சமீப காலமாக பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை ரெஞ்சுஷா சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.




இதனால் மன உளைச்சலில் அவர் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்கொலை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் மலையாளத் திரையுலகம் மற்றும் சின்னத் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த மாதம்தான் அபர்ணா நாயர் என்ற மலையாள சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் ரெஞ்சுஷாவின் மரணம் சம்பவித்துள்ளது.