AMMA.. 3வது முறையாக மீண்டும் போட்டியின்றி தலைவரானார் நடிகர் மோகன்லால்!

admin
Jul 01, 2024,05:34 PM IST

கொச்சி: மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பு நடந்த தேர்தலில் போட்டியின்றி 3வது முறையாக தலைவராக நடிகர் மோகன்லால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


மலையாள நடிகர் சங்கம் அம்மா என்ற  பெயரில் அழைக்கப்படுகிறது. அந்த அமைப்பின் பொதுச் செயலாளராக 8 முறை இருந்தவர் நடிகர் பாபு. இவர் தானாக முன்வந்து தனது பதவியை நிறைவு செய்தார். அத்துடன் இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்தார். இவருக்கு பின்னர் நடிகர் சித்திக் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகர் குக்கு பரமேஸ்வரன், உண்ணி சிவபால் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் நடிகர் சித்திக்  நடிகர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.




இந்நிலையில் தலைவர் பதவிக்கு பலர் போட்டியிட்டனர். அப்போது நடிகர் மோகன்லால் தேர்தலில் போட்டியிட தயாரான உடன் மற்றவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து மனுவை வாபஸ் பெற்றனர். அன்றிலிருந்து இன்று வரை நடிகர் மோகன்லால் போட்டியின்றி மலையாள நடிகர் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். அம்மா அமைப்பின் வருடாந்திர பொதுக்கழு கூட்டம் கொச்சியில் உள்ள கோகுலம் கருத்தரங்க மையத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து திரைப்பிரபலங்கள் வந்து கலந்து கொள்வார்கள்.


மோகன்லால், மஞ்சு வாரியர், விஜய் பாபு, லால், இந்திரஜித் டொவினோ தாமஸ், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான வாக்களிப்பும் நடைபெற்றது. அதில், இம்முறையும் நடிகர் மோகன்லால் எதிர்ப்பின்றி அம்மா அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளர் பதவிக்கு உன்னி முகுந்தன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக நடிகர் சித்திக் தேர்வு செய்யப்பட்டார்.