மனைவி புகார்.. போலீஸாருடன் கடும் வாதம்.. காவல் நிலையத்தில் ஆவேசம்.. நடிகர் விநாயகன் அதிரடி கைது!

Su.tha Arivalagan
Oct 25, 2023,08:48 AM IST

எர்ணாகுளம்: நடிகர் விநாயகனை எர்ணாகுளம் போலீஸார் கைது செய்து பின்னர் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர்.


மலையாளத்தில் பிரபலமான நடிகர் விநாயகன். விதம் விதமான கதாபாத்திரங்களில் நடித்து பலரின் பாராட்டுக்களைப் பெற்றவர். மலையாளம் தவிர தமிழிலும் அவர் நிறையப் படங்களில் நடித்துள்ளார். திமிரு படத்தில் வித்தியாசமான வேடத்தில் வந்த அவர் பின்னர் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்து மிரட்டியவர். ரஜினிக்கே கடும் போட்டி தரும் வகையில் அட்டகாசமான ரோல் இந்தப் படத்தில் அவருக்குக் கிடைத்தது. தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்.


இந்த நிலையில் நேற்று எர்ணாகுளத்தில் அவர் கலாட்டா ஆகி விட்டது. விநாயகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை உள்ளது. இதுதொடர்பாக அவரது மனைவி எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் விநாயகனை விசாரிக்க பெண் காவலர் ஒருவர் விநாயகன் வீட்டுக்குப் போயுள்ளார். அங்கு அவர் பெண் காவலுருடன் வாய்ச் சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.




இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விநாயகனை விசாரணைக்காக காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு அவர் மீது காவல்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தாக கூறி கைது செய்தனர். பின்னர் அவர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.


பிரபல நடிகரான விநாயகன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு நடிகையிடம் தவறாக நடந்து கொண்டதாக சர்ச்சை வெடித்தது. அதேபோல அவர் சொல்லும் கருத்துக்களும் சர்ச்சையாவதுண்டு. சமீபத்தில் கூட சநாதனம் குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தின. ஜாதிய முறைகளுக்கு எதிராகவும், ஜாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகவும் உரத்த குரல் கொடுத்து வருபவர் விநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.