மக்களுடன் முதல்வர் திட்டம்.. 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

Manjula Devi
Jul 27, 2024,03:51 PM IST

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஐந்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொண்டார் முதல்வர் மு க ஸ்டாலின்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் திமுக சார்பில்  தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், உள்ளிட்ட பல திட்டங்கள் பாராட்டை பெற்றுள்ளன. 




அந்த வரிசையில் பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி விரிவாக்கும் அடிப்படையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி கோவையில் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் இந்த மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என வரையறுக்கப்பட்டது.


இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நகர் பகுதிகளில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு அதில் பெறப்பட்ட 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது இதனை தொடர்ந்து நகர்ப்புறங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம் அண்மையில் ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஐந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


மதுரை, நாகப்பட்டனம், வேலூர், கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட ஐந்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், முதல்வரின் முகவரி துறை சிறப்பு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்த கூட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மாவட்டம் வாரியாக மக்களிடமிருந்து எவ்வளவு மனுக்கள் பெறப்பட்டது.. எத்தனை முகாம்கள் நடத்தப்பட்டது.. பெறப்பட்ட மனுக்களில் இருந்து எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.. என்பது தொடர்பான விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.