சமஸ்கிருதத்தை  இந்தியாவின் அலுவல் மொழியாக்கலாமே.. கூறுகிறார் எஸ்ஏ பாப்டே

Su.tha Arivalagan
Jan 28, 2023,11:27 AM IST
நாக்பூர்:  இந்தியாவின் அலுவல் மொழியாக சமஸ்கிருதத்தை அறிவிக்கலாம் என்று முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கூறியுள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.



இந்திய அரசியல் சாசனனத்தின்படி நமது நாட்டுக்கு தேசிய மொழி என்று ஒன்று இல்லை. அலுவல் மொழியாக தமிழ், இந்தி உள்ளிட்ட 8வது அட்டவணையில் உள்ள மொழிகள் உள்ளன. அதேசமயம், இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது.

சமஸ்கிருத பாதி என்ற அமைப்பின் சார்பில் நாக்பூரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு பாப்டே பேசுகையில் இப்படி சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக பேசினார். அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்:

சமஸ்கிருதத்தை நாட்டின் அலுவல் மொழியாக்க வேண்டும்.  நீதிமன்றங்களிலும் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கலாம். சட்ட மேதை அம்பேத்கரே கூட இதைப் பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் நிறைய உள்ளன.

இந்தியும், ஆங்கிலமும் தற்போது அரசு நிர்வாகம், நீதிமன்றங்களில்  அலுவல் மொழிகளாக உள்ளன. சில மாநி உயர் நீதிமன்றங்கள், மாவட்ட கோர்ட்டுகளில் அந்தந்த மாநில மொழிகளை அலுவல் மொழியாக்கும் வசதியும் தற்போது வந்து விட்டது.

அலுவல் மொழி என்பது ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை என்று நான் கருதவில்லை. 1949ம் ஆண்டிலேயே அம்பேத்கர் ஒரு யோசனையைச் சொல்லியுள்ளார். எனவே அதைப் பரிசீலிக்கலாம்.  சமஸ்கிருதம் பல்வேறு மொழிகளுக்கு மூலமாக உள்ளது. எனவே அம்பேத்கர் சொன்னது போல நாம் ஏன் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கக் கூடாது என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

சமஸ்கிருதம் என்பது வட இந்தியாவுக்கோ அல்லது தென் இந்தியாவுக்கோ உரிமையானதல்ல.  இது மதச்சார்பற்ற மொழி. கம்ப்யூட்டர்களுக்கும் இது பொருத்தமான மொழி.  இதை நாசா விஞ்ஞானி ஒருவரே கூறியுள்ளார். 

நாட்டில் 43.63 சதவீதம் பேர் இந்தி பேசுகிறார்கள். ஆங்கிலம் 6 சதவீதத்தினர் மட்டுமே. அதிலும் ஊரகப் பகுதிகளில் அது 3 சதவீதமாக மட்டுமே உள்ளது. பணக்காரர்களில் 41 சதவீதம் பேர் ஆங்கிலம் பேசுகிறார்கள். ஏழைகள் மத்தியில் இது 2 சதவீதமாக உள்ளது. சமஸ்கிருதம், எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளுடன் இணைந்து சமஸ்கிருதமும்  பயணிக்க முடியும் என்றார் பாப்டே.