"எத்திக்ஸ் கமிட்டிக்கு நன்றி...  என் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கி விட்டார்கள்.. மஹுவா மொய்த்ரா!

Su.tha Arivalagan
Nov 10, 2023,01:25 PM IST

டெல்லி: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் வாய்ப்பை, நாடாளுமன்ற எத்திக்ஸ் கமிட்டி எனக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதற்காக அவர்களுக்கு நன்றி என்று திரினமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா கிண்டலாக கூறியுள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான லாகின் விவரங்களை தொழிலதிபருக்குக் கொடுத்ததாகவும், நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப பணம் பெற்றதாகவும் புகாருக்குள்ளானார் மஹுவா மொய்த்ரா. மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா திரினமூல் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய எம்.பி. ஆவார்.


நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக குறிப்பாக அதானிக்கு எதிராக தொடர்ந்து கிடுக்கிப்பிடி கேள்விகளைக் கேட்டு வருபவர் மஹுவா மொய்த்ரா. இந்த நிலையில்தான் இவர் புகாருக்குள்ளானார். ஆனால் இந்தப் புகார்களை திட்டவட்டமாக மறுத்துள்ளார் மஹுவா மொய்த்ரா.




சமீபத்தில் இவர் 10 உறுப்பினர்களைக் கொண்ட எத்திக்ஸ் கமிட்டி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் கமிட்டி தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் தன்னிடம் ஆபாசமான முறையில் கேள்விகள் கேட்டதாக கூறி கூட்டத்தை விட்டு வெளியேறி வெளிநடப்பு செய்தார் மஹுவா மொய்த்ரா. இந்த நிலையில் மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்யலாம் என்று கூறி கமிட்டியில் உள்ள 10 பேரில் 6 உறுப்பினர்கள் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பரிந்துரை செய்துள்ளனர். 


இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் மஹுவா மொய்த்ரா. அவர் கூறுகையில், நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக நெறியே இல்லாத நெறிமுறைக் கமிட்டி எடுத்த முடிவுக்குள்ளாகியுள்ளேன் நான். முதலில் நீக்குவார்களாம், பிறகு ஆதாரத்தைக் கண்டுபிடிக்குமாறு சிபிஐயிடம் சொல்வார்களாம். இது நெறிமுறைக் கமிட்டியே கிடையாது. கட்டப் பஞ்சாயத்துக் குழு. கங்காரு கோர்ட்.  இது 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நான் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவதற்கே வித்திட்டுள்ளது. அதற்காக நன்றி என்று கூறியுள்ளார் மஹுவா மொய்த்ரா.