வற்றாத கண்ணீர்.. இன்றும் தொடரும் "தண்ணீர் தண்ணீர்" கிராமங்கள்!

Su.tha Arivalagan
May 03, 2023,10:15 PM IST

நாசிக்:  தண்ணீர் தண்ணீர் என்று பல வருடங்களுக்கு முன்பு ஒரு படம் வந்தது. அதில் உள்ள கிராமத்தைப் போலவே மகாராஷ்டிராவில் ஒரு கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தின் கதைதான் இது.


கே.பாலச்சந்தர் இயக்கிய படம்தான் தண்ணீர் தண்ணீர். "அத்திப்பட்டி" என்ற கிராமத்தின் கண்ணீர்க் கதை. குடிக்க பொட்டுத் தண்ணீர் கூட இல்லாத கிராமம். தங்களது ஊருக்கு குடிநீர் கொண்டு வருவதற்காக கிராமமே  சேர்ந்து போராடும்.. ஆனாலும் பயன் இருக்காது. பல கிலோமீட்டர் தூரம் நடந்து போய் தண்ணீர் கொண்டு வந்து குடிக்கும் அவல நிலையை மாற்ற போராடி அதற்காக குண்டடடி பட்டு மாளும் அப்பாவி மக்களின் கதைதான் அது.


அக்காலத்தில் அப்படி இருந்திருக்கலாம்.. ஆனால் இப்பெல்லாம் அப்படி இருக்குமா என்ன என்று நீங்கள் கேட்கலாம்.. இப்பவும் அப்படிப்பட்ட அத்திப்பட்டிகள் இருக்கின்றன. ஆனால் நம்ம ஊரில் அல்ல. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகேதான் ஒரு கிராமம் அத்திப்பட்டியைப் பிரதிபலிப்பதாக உள்ளது.


போர்தபடா என்ற அந்தக் கிராமத்தில் குடிநீருக்கு பெரும் பிரச்சினை. வறட்சி ஒரு பக்கம், தண்ணீர் இல்லாத கஷ்டம் மறுபக்கம். இந்தக் கிராமத்தில் வசிப்போர்  பழங்குடியின மக்கள் ஆவர். தண்ணீருக்காக இவர்கள் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து போய் அங்குள்ள கிணற்றில் இருந்துதான் எடுத்து வர வேண்டியுள்ளது. 


இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறுகையில், எங்களது கிராமத்தில் 2 கிணறுகள் உள்ளன. ஆனால் அவை வறண்டு போய் விட்டன. இதனால் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து போய் அங்கு மலையடிவாரத்தில் உள்ள கிணற்றிலிருந்துதான் தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது.


போகும் பாதையும் சரியில்லை. கல்லும் முள்ளுமாக இருக்கும். இதனால் பல பெண்களுக்கு காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீருக்காக நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். அந்தக் கிணற்றிலும் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் தண்ணீர் எடுத்து வருவது பெரும் கஷ்டமாக இருக்கிறது. எங்களது ஊரில் குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை என்றார்.


போர்தபடா பகுதியைச் சுற்றிலும் பெரும் வறட்சி நிலவுகிறது. இது மலைப் பாங்கான பகுதி என்பதால் தண்ணீருக்கு எப்போதுமே பிரச்சினைதான்.  அக்கம் பக்க கிராமங்களிலும் கூட கிணறுகள் வற்றிப் போயுள்ளனவாம். இதனால் தண்ணீருக்காக இப்பிராந்திய மக்கள் படும் அவதி சொல்லில் அடங்காதது.


போர்தபடா கிராமத்தில் மொத்தம் 110 வீடுகள் உள்ளன. இங்கு 1150க்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். மொத்த கிராமமும் தண்ணீருக்காக நடந்து கொண்டிருக்கிறது. இப்போது அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்து வரும் கிணறும் கூட வற்ற ஆரம்பித்துள்ளதாம். இன்னும் 15 நாளுக்கு தண்ணீர் வந்தால் அதுவே பெரிது என்று கிராமத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.


இந்தியா வல்லரசாகும் கனவுடன் வேகமாக நடை போடுகிறது.. உலக மக்கள் தொகையிலும் முதலிடத்தைப் பிடித்து விட்டோம்.. டெக்னாலஜியிலும் வேகமாக முன்னேறி வருகிறோம்.. பொருளாதார சக்தியாகவும் வளர்ந்து வருகிறோம்.. ஆனால் தண்ணீர் கதைகளுக்கு முடிவில்லையே.. அதில் எப்போது தன்னிறைவு அடைவோம்?