அழகர் ஆற்றில் இறங்குகிறார்.. மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை.. மதுரை கலெக்டர் சங்கீதா
மதுரை: மதுரையில் வருகிற மே 12ம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.
மதுரையில் சித்திரை திருவிழா களை கட்டத் தொடங்கியுள்ளது. வருகிற 28ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கவுள்ளது. சித்திரைத் திருவிழா என்பது சைவ மற்றும் வைணவ மதங்களின் கூட்டுத் திருவிழா என்பதுதான் விசேஷமானது. மதுரையில் எழுந்தருளியிருக்கும் மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவுடன், அழகர் கோவில் கள்ளளழகர் விழாவையும் இணைத்துக் கொண்டாடுகிறார்கள்.
மதுரையின் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத்தைப் பார்க்க அண்ணனான அழகர் புறப்பட்டு வருவதாகவும், அவர் வருவதற்குள் கல்யாணம் நடந்து விடுவதால் கோபம் கொண்டு மதுரைக்குள் வராமல் அப்படியே ஆற்றங்கரையோரமாகவே அழகர் மலைக்கு அவர் திரும்பியதாகவும் ஐதீகம். இந்த இரண்டையும் இணைத்துதான் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அன்று லட்சக்கணக்கானோர் வைகை ஆற்றில் கூடுவார்கள் என்பதால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.