மதுரை டூ பெங்களூர்.. வழி திருச்சி.. வந்தே பாரத் ரயில்... நாளை முதல் ஜிகு ஜிகு ஆரம்பம்!

Meenakshi
Jun 25, 2024,06:22 PM IST

மதுரை: மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.


மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை செவ்வாய்க்கிழமை தவிர்த்து, நாளை முதல் அடுத்த மாதம் ஜூலை 29ம் தேதி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வந்தே  பாரத் ரயில் நாளை அதிகாலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு காலை 7 மணிக்கு  செல்கிறது. அங்கிருந்து காலை 7.12 மணிக்கு புறப்பட்டு கரூர், சேலம் வழியாக சென்று, பெங்களூருக்கு மதியம் 1 மணிக்கு சென்றடைகிறது. 


அதே போல் மறுமார்க்கமாக, மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் இந்த ரயில், திருச்சிக்கு இரவு 7.35 மணிக்கு வந்தடைகிறது. அதன்பின்னர் 7.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் ரயில், அதன் பின்னர் மதுரைக்கு இரவு 9.45 மணிக்கு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த வந்தே பாரத் ரயிலில் ஏசி சேர் காரில் பயணிக்க கட்டணம் 1300 ரூபாயும், எக்ஸிக்யூட்டிவ் கார் சேரில் 2300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை டூ பெங்களூரு இடையிலான 435 கிலோமீட்டர் தொலைவிற்கும் இதே கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவை பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நவீன தொழில்நுட்பத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருவதினால் பொதுமக்கள் இந்த ரயில் சேவையை விரும்பி வருகின்றனர். இதற்கு சான்றாக முந்தைய வந்தே பாரத் ரயில்களில்  பயணிக்கும் பயணிகளின் கூட்டத்தை கூறலாம்.