சாதாரண மழைக்கே மிதக்கும் மதுரை.. ஸ்மார்ட் சிட்டி திட்டமெல்லாம் என்னாச்சு.. மக்கள் பெரும் அவதி!

Manjula Devi
Oct 24, 2024,12:00 PM IST

மதுரை: கடந்த ஒரு சில நாட்களாக மதுரை நகரில் இரவு நேரங்களில் பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் வெளியே செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளும் படு மோசமாக இருப்பதால் தண்ணீர் தேங்கி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அனேக இடங்களில் கன முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் நிலவி வரும் புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. 



மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடித்தாலும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே மதுரை மாநகரின் முக்கியமான பகுதிகளில் சாலை பணி மற்றும் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் ரோடுகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இது தவிர பெரும்பாலான பகுதிகளிலும் உள்ள தெருக்கள், சாலைகள் மோசமாக உள்ளன.

மழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளன. இதனால் போக்குவரத்திற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் மக்கள் கடைவீதிகளுக்கு செல்ல சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் சாலை மற்றும் மேம்பாலப் பணி காரணமாக ரோடுகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் சாதாரண மழைக்கே தாக்கு பிடிக்காமல் மதுரை மாநகரின் பல பகுதிகள் வெள்ளகாடாகி உள்ளன. அத்துடன் கழிவு நீரும் சேர்ந்து வெளியேறுவதால் சுகாதாரசீர் கேடும்  நிலவி வருகிறது. இதனால் நோய் பாதிப்பு ஏற்பட கூடுமோ எனவும் மக்கள் அச்சப்படுகின்றனர். 



மாநகராட்சி நிர்வாகம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே தேங்கி இருக்கும் தண்ணீரை மோட்டார் பம்புகள் கொண்டு அகற்றி வருகிறது.  இருந்தாலும் கூட தொடர் மழை காரணத்தால் மீண்டும் மீண்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மதுரை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சாதாரண மழைக்கே இப்படி தண்ணீர் தேங்கினால், நாளை ஒரு வேளை, சென்னை, தூத்துக்குடியில் பெய்தது போல பெருமழை பெய்தால் சிட்டி என்னாகும் என்ற கவலை ஏற்படுகிறது.

மதுரை மட்டுமல்லாமல் கோவை, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாநகரங்களும் கூட மழையின்போது தத்தளிக்கும் அவல நிலை இந்த மழை சீசனில் பார்க்க முடிகிறது. எனவே சென்னைக்குத் தரப்படும் அதே அளவிலான முக்கியத்துவத்தை 2ம் நிலை நகரங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. குறிப்பாக மதுரைக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து அதை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.. காரணம், மதுரை  அந்த அளவுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் மிக மோசமாக உள்ளது.

சு. வெங்கடேசன் எம்பி அதிருப்தி



மதுரையில் நிர்வாக ரீதியாக வெள்ள நிலையை சரி செய்வதில் அலட்சியம் காட்டப்படுவதாகவும் ஒரு புகார் எழுந்துள்ளது. இதை மதுரை எம்பி சு. வெங்கடேசனும் வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்டில், அதீத மழை மற்றும் எதிர்பாராத வெள்ள நீரால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் நிர்வாகத்தின் கவனக் குறைவாலும்,   முன்னெச்சரிக்கை இன்மையாலும் மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தலையிட வேண்டும்

சென்னையில் பெரு மழை நேரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினே நேரடியாக களத்தில் இறங்கி பணிகளை முடுக்கி விட்டார். அவரே  வந்ததால் அதிகாரிகளும், ஊழியர்களும் விழிப்போடு செயல்பட்டனர். ஆனால் மதுரையில் அப்படி ஒரு நிலை இருப்பதாக தெரியவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட வந்த திமுக எம்.எல்.ஏ. கோ தளபதி காரை விட்டு கீழே இறங்காமல் பார்வையிட்டதால் மக்கள் கடும் அதிருப்தியைடந்து குரல் எழுப்பும் அளவுக்கு நிலைமைதான் அங்கு உள்ளது.

எனவே துணை முதல்வராகவும் தற்போது உள்ள உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு விசிட் அடிக்க வேண்டும். அப்போதுதான் நிலைமை கொஞ்சமாவது மேம்படும். நவம்பரில் பெருமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. எனவே அதற்குள் அரசு சுதாரித்தால் நல்லது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்