தமிழகத்தில் தொடரும் வெடி குண்டு மிரட்டல்கள்.. இன்று 8 மதுரை பள்ளிகளுக்கு மிரட்டல்!

Meenakshi
Sep 30, 2024,11:45 AM IST

மதுரை:   தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது கிட்டத்தட்ட தொடர் கதையாகிறது. பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும் இந்தக் கும்பல்கள் மீது இரும்புக் கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இன்று மதுரையில், கேந்திரிய வித்யாலயா உட்பட 8 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.


மதுரையில் நரிமேடு பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு தொலைபேசி மூலமாகவும், அனுப்பாடியில் இயங்கி வரும்  வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி, சிந்தாமணி பகுதியில் இயங்கி வரும் ஜீவனா பள்ளி,நாகமலை, பொன்மேனி பகுதியில் உள்ள பள்ளிகள்  உட்பட 8 பள்ளிகளுக்கு இமெயில் மூலமாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.




கடந்த சில நாட்களாக பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடந்து வந்த தேர்வுகள் கடந்த வெள்ளியுடன் முடிந்துள்ள நிலையில், மாணவர்கள் அனைவரும் விடுமுறையில் உள்ளதால் பெற்றோர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். குறிப்பாக நகரின் மையப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது மதுரை மாவட்டம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி குண்டு மிரட்டலால் பள்ளிகள், பெற்றோர் மற்றும் மாணவர்களிடை பதற்றம் ஏற்பட்டுள்ளது.


இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் மோப்ப நாய்களுடன் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி வளாகங்கள், வாகனங்கள் நிறுத்தும் பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்ததிலும், சோதனை நடத்தியதிலும் எந்த ஒரு வெடிகுண்டும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வெரும் புரளி என தற்போது கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீப காலமாக சேலம், ஈரோடு , சென்னை என்று பல்வேறு ஊர்களிலும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அனைத்துமே இமெயில் மூலம் வந்த மிரட்டல்கள் ஆகும். இன்று மதுரைக்கு மிரட்டல் வந்துள்ளது. தொடரும் மிரட்டல்கள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்