144 தடை உத்தரவு வாபஸ்.. திருப்பரங்குன்றம் மலை கோவில், தர்காவுக்குச் செல்ல போலீஸ் அனுமதி!

Manjula Devi
Feb 05, 2025,12:53 PM IST

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா இடையேயான விவகாரம் தொடர்பாக இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மலைமீது செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டு இன்று மலை மீது உள்ள கோவில் மற்றும் தர்காவுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.


முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்ற மலை மீது இந்துக்கள் வழிபடக்கூடிய காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் முஸ்லிம்கள் வழிபடக்கூடிய சிக்கந்தர் தர்காவும் அமைந்துள்ளது. இந்த தர்க்காவில் இந்துக்களின் புனித தன்மையை சீர் குலைக்கும் நோக்கில் முஸ்லிம்கள் அசைவ சமைக்கப்பட்டதாக தொடர் சர்ச்சைகள் எழுந்து வந்தது. அதே சமயத்தில் இந்த மலை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாகவும் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. 


இதனை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் ஆட்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இருப்பினும் தடையை மீறி திருப்பரங்குன்றம் கோவில் முன்பு போராட்டம் நடத்துவதாக இந்து முன்னணி அமைப்பினர் வலியுறுத்தி வருவதாக தகவல் வைரலாகி வந்தது.




இதனையடுத்து மதப் பிரச்சினை ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை  உருவாக வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் நேற்று, முன்தினமும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க திருப்பரங்குன்றம் மலை முழுவதுமாக போலீசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. 4000க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டது. 


சிக்கந்தர் தர்கா செல்லும் வழி, காசி விஸ்வநாதர் கோவில் செல்லும் வழி, திருப்பரங்குன்றம் மலை உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் போலீசார் சோதனை மேற்கொண்டு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.  திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு பக்தர்கள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.


இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் அனுமதியுடன், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை போராட்டம்  நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கூடி இதில் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தற்போது, திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டு திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயில், மற்றும் சிக்கந்தர் தர்காவுக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பக்தர்களாக சென்று வழிபடலாம். அதேசமயம், கட்சி சார்பாகவோ அல்லது அமைப்பு சார்பாகவோ செல்ல அனுமதி கிடையாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்