திசை திருப்பும் கருத்து.. வாபஸ் பெறுங்கள்.. அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு. வெங்கடேசன் கோரிக்கை

Su.tha Arivalagan
Dec 23, 2023,05:44 PM IST

மதுரை: மழை வெள்ள அபாயத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டோம் என்று சொன்ன திசை திருப்பும் கருத்தை வாபஸ் பெறுங்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ்நாட்டு வெள்ளம் மற்றும் நிவாரண நிதி, நிவாரணப் பணிகள் குறித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது அவர் கூறிய கருத்துக்கள் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.


தமிழ்நாட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமதித்துள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சாடியுள்ளார். பல்வேறு தமிழ்நாட்டுத் தலைவர்களும் நிர்மலா சீதாராமன் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.




இந்த நிலையில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


நான்கு மாவட்ட மழைவெள்ளத்தைப் பற்றி 12 ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது என்கிறார் நிதியமைச்சர். அப்படியென்றால் 17 மாலை 6 மணிக்கு காசி தமிழ்ச்சங்க ரயிலின் துவக்கவிழாவை பிரதமரே நடத்திவைத்தாரே எப்படி?  கொட்டும் பேய்மழையில் எண்ணிலடங்கா பயணிகளை பணயம் வைத்தாரே எப்படி?


அன்றைய தினம் கடும்மழையால் தென்மாவட்டங்களில் பல ரயில்களை ரத்து செய்யமுடியாமல் போனதற்கு இவ்விழாவே காரணம் என ரயில்வே அதிகாரிகள் பலர் புலம்பியதை அறிவீர்களா? வானிலையின் இவ்வளவு பெரிய எச்சரிக்கையை மீறி செந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 7 மணிக்கு புறப்பட்டதும், ஶ்ரீவைகுண்டத்தில் அது சிக்கிக்கொண்டு பயணிகள் இரண்டு நாட்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானதற்கும் யார் பொறுப்பு?


தனது அரசின் கீழ் இயங்கும் வானிலை அறிக்கையை அறியாத பிரமதமரா? அல்லது என்னவானாலும் என்ன.. தமிழ்நாட்டு மக்கள் தானே என்ற மனநிலையா?


நிதியமைச்சர் அவர்களே! 


மழை வெள்ள அபாயத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டோம் என்று தாங்கள் சொன்ன திசைதிருப்பும் கருத்தை வாபஸ் பெறுங்கள்.


இல்லையென்றால் இந்த கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுபெறுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.