மதவெறி அரசியலில்.. அயோத்தி சமத்துவத்தின் அடையாளமாக ஒளிர்கிறது.. எம்பி சு வெங்கடேசன் புகழாரம்!

Manjula Devi
Jun 05, 2024,04:10 PM IST

மதுரை: பாஜகவினரால் மத வெறி அடையாளமாக காட்டப்பட்ட அயோத்தி ராமர் கோவில் இடம் பெற்றுள்ள தொகுதியில் பாஜக தோல்வி அடைந்து இந்தியா கூட்டணி வென்றிருப்பதன் மூலம் மதவெறி அரசியலின் அடையாளமாக்கப்பட்ட அயோத்தி சமத்துவத்தின் அடையாளமாகி ஒளிர்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை வேட்பாளரான சிட்டிங் எம்.பி. சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.


அயோத்தியில் நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றம் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்தது. இதனை அடுத்து அயோத்தியில் ராமர் கோவில் மிகப்பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது. இதன் பிரான பிரதிஷ்டை கடந்த ஜனவரி மாதம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மிகப்பெரிய சினிமா  நட்சத்திரங்கள், ரிஷிகள், பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், மகான்கள் என பலரும் கலந்து கொண்டனர். 




பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் வருவதற்கு ஏதுவாக அயோத்தி அறக்கட்டளை சார்பாக பல முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அயோத்தி மாநகரமே விழாக்கோலம் பூண்டது. மிகப் பெரிய அளவில் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இது அரசியல் விழாவாக மாற்றப்பட்டு விட்டதாக காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் கூறின. காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த விழாவைப் புறக்கணித்தன.


பல ஆண்டுகளாக கட்டப்படாத அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி காலத்தில் கட்டி முடித்ததால் இந்த முறை லோக்சபா தேர்தலில் கண்டிப்பாக பாஜகவுக்கு மிகப்பெரிய ஆதரவு பெருகும். இதன்மூலம் வட மாநிலங்களில் பாஜக பெரும் வெற்றி பெறும் என கருதப்பட்டது. ஆனால் நேற்று வெளியான லோக்சபா தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லாலு சிங்  ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததார். மாறாக சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். கடந்த 2009 ஆம் ஆண்டு காங்கிரஸிடம் இருந்த பைசாபாத் தொகுதி இந்த வருடம் மீண்டும்  காங்கிரஸ் கூட்டணியின் கைக்கு வந்துள்ளது நினைவிருக்கலாம்.


இதை சுட்டிக் காட்டி சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ராமர் கோவில் கட்டப்பட்ட அயோத்தி பைசாபாத் தொகுதியின் வெற்றியே இந்தியா சொல்லும் செய்தி. பொதுத் தொகுதியில் நின்ற சமாஜ்வாதி கட்சியின் தலித் வேட்பாளர் அவதேஷ் பிரசாத் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். மதவெறி அரசியலின் அடையாளமாக்கப்பட்ட அயோத்தி சமத்துவத்தின் அடையாளமாகி ஒளிர்கிறது. அன்பே வெல்லும்..! என கூறியுள்ளார்.