கொடி ஏறியதும்.. மண்ணை நனைத்து மதுரை மக்களை மகிழ்வித்த மீனாட்சி!

Meenakshi
Apr 12, 2024,05:32 PM IST

மதுரை: கோடை காலத்திலும் குளுமையை ஏற்படுத்தி மண்ணை நனைத்து மக்களை மகிழ்வித்துள்ளார் மதுரை மீனாட்சி அம்மன். சித்திரை திருவிழாவிற்கு கொடி ஏற்றப்பட்ட உடனே வர்ண பகவான் தனது கருணை மழையை பொழிந்தார்.


மதுரை என்றாலே சித்திரைத் திருவிழா தான் பெரும்பான்மையான மக்களுக்கு நினைவுக்கு வரும். ஆம். ஆண்டுதோறும் பங்குனி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் கொடியேற்றத்துடன் துவங்கி, 12 நாட்கள் இவ்விழா நடைபெறுவது வழக்கம். ஏப்ரல் 12ம் தேதியான இன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது இவ்விழா. கொடி ஏற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே மழை வந்து பூமியை நனைத்து கோடையிலும் குளுமையை ஏற்படுத்தி விட்டது.




கோடை காலத்தில் தான் சித்தரை திருவிழா கொண்டாடப்படும். எவ்வளவு வெயிலாக இருந்தாலும் சித்திரை திருவிழாவிற்கு கொடி ஏற்றினால், உடனே வருணபகவான் மழை பொழிவை ஏற்படுத்தி விடுவார். இந்த அதிசய நிகழ்வு இன்று மட்டும் அல்ல. ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழா கொடியேற்றத்தின் போது மழை வருவது ஐதீகமாகும்.


இந்த சித்திரை திருவிழாவிற்காக இன்று காலை மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதி முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்தில் இருக்கும் தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றம் வெகு விமர்மையாக பெரும்பான்மையான மக்கள் பூடை சூழ நடைபெற்றது. இந்த விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, கோவில் தக்கார் ருக்மணி பழனிவேல்ராஜன், அமைச்சர், மாநகர காவல் ஆணையர், மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




திருவிழாவின் முதல் நாளான இன்று துவங்கி, கடைசி நாள் வரை தினமும் அம்பாள், சுவாமியின் வீதிஉலா நடைபெறும். இந்த நாட்களில் மதுரை முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்படும். திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை சுவாமியும், பிரியாவிடை அம்மனும் கற்பக விருட்ச வாகனத்திலும், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் செய்வார்கள். 


சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி பட்டாபிஷேகம் ஏப்ரல் 19ம் தேதியும், மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 21ம் தேதியும், திருத்தேரோட்டம் ஏப்ரல் 22ம் தேதியும் நடைபெற உள்ளன. ஏப்ரல் 22ம் தேதி மதுரையில் கள்ளழகருக்கு எதிர்சேவையும், ஏப்ரல் 23ம் தேதி காலை 6 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில், கள்ளழகர் வேடமிட்டு, அழகர்மலை சுந்தரராஜ பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 


இவ்விழாவினைக் காண மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் ஏன் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இதற்காக மதுரை மாநகரம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதும் உண்டு.