மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு.. திருப்பணிகள் கோலாகல தொடக்கம்

Su.tha Arivalagan
Sep 02, 2023,03:59 PM IST
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழாவையொட்டி கோவில் திருப்பணிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 14 வருடங்களுக்குப் பிறகு குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி, ராஜகோபுரம் ,மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் அம்மன் சன்னதி கோபுரம் ஆகிய ஐந்து கோபுரங்களுக்கும் புரணமைப்பு திருப்பணிகள் செப்டம்பர் 4ஆம் தேதி பாலாலயம் பூஜையுடன் தொடங்கவுள்ளன.

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்  கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்றது. 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆகம விதிப்படி 2022 ஆம் ஆண்டு நடைபெற வேண்டும் என அறிவித்திருந்தனர். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு மீனாட்சி அம்மன் கிழக்கு கோபுரத்திற்கு அருகே அமைந்துள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது. பின்னர் இதனை சீர் செய்தனர் .இருப்பினும் கொரோனா பரவலின் காரணமாக குடமுழுக்கு  விழாவும், விபத்து ஏற்பட்ட பகுதியை சீர்படுத்தவும் இரண்டு வருடங்கள் போய் விட்டது. விரைவில் மண்டபத்தை சீர்படுத்தி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ. 25 கோடி மதிப்பில் கோவில் திருப்பணிகள் மற்றும் ரூ. 18 கோடியில் வீர வசந்தராயர் மண்டபம் புணரமைப்பு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது திருப்பணிகள் தொடங்கியுள்ளன.

தூங்கா நகரமான மதுரை மாநகரில் மீனாட்சியம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும் குறிப்பாக சித்திரைத் திருவிழா, ஆவணி மூலத் திருவிழா, ஆடி  முளைக்கட்டு திருவிழா போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவை. திருவிழாக்களின் போது மதுரையே அதிரும் அளவிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று சாமி தரிசனம் செய்வார்கள். அப்படிப்பட்ட மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு கிட்டத்தட்ட 2025 கடைசியில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.