அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ரெடி.. காளைகளும் தயார்.. ஜல்லிக்கட்டுக்கு தேதி குறிச்சாச்சு!

Manjula Devi
Jan 04, 2024,07:21 PM IST

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்  தேதிகளை  தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. வருடா வருடம் பொங்கல் பண்டிகை சமயத்தில்  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். தமிழர்களின் வீர விளையாட்டாக, பாரம்பரியமாக, கலாச்சாரமாக பல ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது ஜல்லிக்கட்டு.


மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை,  ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் முதல் நாள் அவனியாபுரத்தில் தொடங்கி அடுத்த நாள் பாலமேடு, மூன்றாம் நாள் அலங்காநல்லூரில் நடைபெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர். அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருவார்கள்.




ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை காளைகள் மட்டுமல்லாது தமிழக முழுவதும் உள்ள காளைகள் பங்கு பெறுகின்றன. இதற்காக காளையின் உரிமையாளர்கள் காளைகளை வெகு சிறப்பாக தயார் செய்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, மண்ணில் கொம்புகளை குத்துதல், கட்டிப்போட்டு காளைகளை அடக்குதல் போன்ற பயிற்சிகள் வழங்குவது வழக்கம், அந்த வகையில் தற்போதும் ஜனவரி மாத தொடக்கத்திலிருந்து ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.


இந்த வருடம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் பங்குபெறும் காளைகளில் நாட்டுக்  காளைகளுக்கு மட்டுமே அனுமதி. கலப்பின காலங்களுக்கு அனுமதி கிடையாது என  கூறப்படுகிறது. ஏனெனில் நாட்டு காளைகளுக்கு திமில் இருக்கும். இதனால் காளையர்கள் எளிதாக அடக்க முடியும் . வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கலப்பின காளைகளுக்கு திமில் இருக்காது. காளையர்கள் அடக்க முடியாமல் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்த வருடம் நாட்டு காளைகள் மட்டுமே பங்கு பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நேற்று முதல் நாட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு காளைகளுக்கான தகுதிச் சான்று வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகளை முறைப்படி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். அதன்படி, அலங்காநல்லூரில் 17 ஆம் தேதியும் , பாலமேட்டில் 16ஆம் தேதியும், பொங்கல் திருநாள் அன்று அவனியாபுரத்தில் 15ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தவுள்ளன. ஜல்லிக்கட்டுப் போட்டிகள், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடத்தப்படும். இதை உறுதி செய்ய கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.