மாணிக்க மூக்குத்தி.. மதுரை மீனாட்சிக்கு நாளை திருக்கல்யாணம்.. வீடுகள் தோறும் விழாக்கோலம்!

Meenakshi
Apr 20, 2024,06:10 PM IST

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நாளாக கருதப்படுவது மீனாட்சி திருக்கல்யாணம்தான். அந்த நாள் நாளை!.. விடிஞ்சா கல்யாணம்.. அன்பு காட்டி அருளாட்சி புரியும் ஆலவாய் அம்மனுக்கு என்பதால் மதுரையே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.


இன்று பட்டாபிஷேகம் நடந்து, மதுரையின் அரசியாக முடி சூடிய மீனாட்சி அம்மன், நாளை சுந்தரேஸ்வரர் சமேதராய் மதுரை மக்களுக்கு தம்பதியாக காட்சி அளிப்பார்.


சைவமும், வைணவமும் இணைந்து கைகோர்க்கும் பெரு விழா என்றால் மதுரை சித்திரைத் திருவிழாதான். மதுரையில் நடக்கும் திருவிழாக்களில் மிகுந்த பிரசித்தி பெற்ற விழாவாக சித்திரை திருவிழா கருதப்படுகிறது. 12 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் தான். இந்த திருமணத்தை பார்க்க மதுரை மக்கள் மட்டும் இன்றி உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கலந்து கொள்வார்கள். 




இந்த திருக்கல்யாணம் திக் விஜயம் முடிந்த மறுநாள் அன்னை மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நடைபெறுவது வழக்கம்.  திருக்கல்யாண வைபவம், மீனாட்சி அம்மன் கோவிலின்  வடக்கு மேற்கு வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறும். இந்த வருடம்  இந்நிகழ்ச்சி ஏப்ரல் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் நடைபெறுகிறது. இந்த திருமணத்தை பார்வையிட ஏராளமான பக்தர்கள் மதுரையில் வந்து குவிவார்கள். மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் போது பக்தர்களும் தங்களுடைய திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்வார்கள். மீனாட்சி அம்மன் கோவிலே திருமண மேடையாக மாறிக் காட்சி அளிக்கும். திருமணத்திற்கு நேரில் வர முடியாத பக்தர்கள் தங்கள் இல்லங்களில் உள்ள பூஜை அறைகளில் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்வார்கள்.


சித்திரைத் திருவிழா நடக்கும் 12 நாட்களும் வீதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு ஆலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் வீதியுல வருவர்.  விழா நடைபெறும் நாட்களில் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். மீனாட்சி திருக்கல்யாண நாளில் திருமண விருந்து ஊர் மக்கள் அனைவருக்கும் வழங்கப்படுவது வழக்கம். இந்த திருமண சாப்பாட்டிற்காக பொதுமக்கள் வேண்டுதல்கள் வைத்து காய் நறுக்குவது, இதர திருமண வேலைகளை செய்வதும் வழக்கமாகும். அன்று நாள் முழுவதும் மதுரை மாநகரம் முழுவதும் உள்ள அனைத்து பக்தர்களுக்கும் ஆறுசுவை உணவு வழக்கப்படும்.




இந்தத் திருமண வைபவத்திலிருந்துதான் கள்ளழகரின் தொடர்பு தொடங்குகிறது. அதாவது தங்கை மீனாட்சியின் கல்யாணத்திற்காக அழகர் மலையிலிருந்து பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு கிளம்புகிறார். ஆனால் அவர் ஆற்றைக் கடக்கும்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் உரிய நேரத்திற்கு திருமணத்திற்கு வர முடியாமல் போகிறது. அழகருக்காக காத்திருக்காமல் கல்யாணமும் முடிந்து விடுகிறது.  திருமணத்தை காண வரும்  கள்ளழகர் திருமணம் முடிந்த செய்தி கேட்டு கோபித்து கொண்டு அக்கரைக்கு செல்லாமல் அப்படியே கரையோரமாகவே தனது ஊர் திரும்பும் நிகழ்வே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமாகும். 


திருக்கல்யாணத்திற்கு அடுத்த முக்கிய நிகழ்வாக கருதப்படுவது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தான் எனலாம். இந்த இரு பெரும் நிகழ்வுகளும் மதுரை மக்களுக்கு ஆண்டு தோறும் அருள் தரும் மிக முக்கிய திருவிழா வைபவங்கள் ஆகும். சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சிகள் நெருங்கி விட்டதால் மதுரையே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.