Madurai Rains: மிதக்கும் மதுரை.. எடுக்கப்பட்ட ஆக்ஷன் என்ன?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவான விளக்கம்

Su.tha Arivalagan
Oct 26, 2024,12:42 PM IST

சென்னை:   மதுரையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக விளக்கியுள்ளார்.


மதுரையில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. நேற்று பல்வேறு கண்மாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாகவும், குறுகிய நேரத்தில் அதிக அளவில் மழை கொட்டித் தீர்த்ததாலும் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளது. முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் சரிவர  செய்யப்படாததால் மக்கள் பெரும் துயருக்குள்ளாக நேரிட்டு விட்டது.




வெள்ளம் பல்வேறு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது  தொடர்பாக ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட ஆரம்பித்ததன் எதிரொலியாக, மதுரை கலெக்டர் சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். இன்று காலை தான் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் செல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்து பணிகளை முடுக்கி விட்டனர்.


துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மழை வெள்ள பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம்  ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மதுரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கியுள்ளார். முதல்வரின் அறிக்கை:


மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி,  மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் ஆகியோரை அனுப்பி வைத்தேன். 


மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களையும் தொடர்புகொண்டு கள நிலவரம் குறித்து அறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன். 




குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க இராட்சத மின் மோட்டார்களும் பொறியாளர்களும் பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர். 


மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பிவைக்கப் பட்டுள்ளார். 


தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதல்வர் விளக்கியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்