7 பிரிவுகளில் கைதான டிடிஎப் வாசன்.. மன்னிப்பு கடிதம் தர உத்தரவிட்டு.. ஜாமீன் கொடுத்த மதுரை கோர்ட்

Meenakshi
May 30, 2024,05:54 PM IST

மதுரை: காரை வேகமாக ஓட்டியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் கைதாகிய யூடியூபரான டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கியது மதுரை நீதிமன்றம்.


பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் அதி வேகமாக பைக் ஓட்டி வீடியோ வெளியிட்டு பிரபலமானவர். யூட்யூபில் வீடியோ வெளியிடுவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆபத்தான முறையில் பைக் ஓட்டி வீலிங் செய்ததினால்,கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவித்தார்.




இதன் பின்னர், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் செல்போனில்  பேசியபடி கார் ஓட்டிய டிடிஎஃப் வாசன் மதுரை அண்ணாநகர் போலீசாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.  டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், இன்று மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வாசனை ஆஜர்படுத்தினர்.


அப்போது, டிடிஎஃப் வாசன் தரப்பில், வாசன் காரை இயக்கியதால் எந்த விதமான பாதிப்பும் பொதுமக்களுக்கு எற்படவில்லை என்றும் அவர் வேகமாக காரை இயக்கி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக பொதுமக்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. அவர் வளர்ந்து வரும் இளைஞர். மேலும், வருகிற மே 4ம் தேதி அவர் படத்தில் நடிக்க இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.


வாதங்களை கேட்ட நீதிபதி இறுதியாக, வாசனிடம் மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதி நீதிமன்றத்தில் எழுதிக் கொடுக்குமாறு உத்தரவிட்டு ஜாமீன் அளிக்க உத்தரவிட்டார்.